×

வீடுபுகுந்து கத்திரிக் கோலால் குத்தி பெண்ணை கொன்று நகை கொள்ளை

 

புதுச்சேரி: வீடுபுகுந்து கத்திரிக் கோலால் குத்தி பெண்ணை கொன்று நகையை கொள்ளையடித்த இளம்தம்பதியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியில் 3 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தரைதள வீட்டில் வசித்து வருபவர் மணி (48). இவரது மனைவி ரமணி (42). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள், பிடிஎஸ் படித்து வருகிறார். மகன், 11ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் வீடு அருகே டிபன் கடை நடத்தி வருகின்றனர். ரமணி நேற்று மதியம் கடையில் வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார். கணவர் மணி, மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு, மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

வழக்கமாக ஜன்னல் ஓரம் சாவி வைக்கும் இடத்தில் இருந்த சாவியை எடுத்து, மணி கதவை திறந்து உள்ளே சென்றார். பின்னர் வீட்டை சுத்தம் செய்தபோது, அங்குள்ள சிறிய சந்து பகுதியில் ரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணி, கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, ரமணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ரமணி கத்திரிக்கோலால் கழுத்து, தலை, நெற்றி, முகத்தில் சரமாரியாக குத்தப்பட்டும், கழுத்தில் துணி சுற்றப்பட்ட நிலையிலும் கிடந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் கம்மல் மாயமாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தீவிர மணியிடம் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரமணியின் அக்கா மகனின் நண்பரான பிரவீன் (25) என்பவர் நகைக்காக ரமணியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ரமணியின் வீட்டில் அவரது அக்கா மகன் சேதுநாராயணன் (23) தங்கி வந்தார். உணவு டெலிவரி வேலை செய்யும் அவர், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்து வந்தார். அவரது நண்பர் பிரவீன் அவரை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது ரமணி வீட்டில் 3 சாவிகள் இருப்பதும், ஒரு சாவி கணவரிடமும், இன்னொரு சாவி மனைவியிடமும், 3வது சாவியை வீட்டில் ரமணியின் அக்கா மகனிடம் இருப்பது பிரவீனுக்கு தெரியவந்துள்ளது. சில நேரங்களில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது ஜன்னல் ஓரம் சாவியை அவர்களில் ஒருவர் வைத்துவிட்டு செல்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில், கொலையாளி பிரவீனுக்கு ஏற்கனவே, சாவி வைக்கும் இடம் தெரிந்திருந்தது. வழக்கமாக வீட்டில் ரமணி இருக்கும்போது கதவை பூட்ட மாட்டார். இதனிடையே ரமணியை நேற்று கொடூரமாக கொலை செய்த பிரவீன், பின்னர் சாவியால் வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச் சென்றுள்ளார். ரமணியின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள், நேற்று திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர்.

இதை நோட்டமிட்டே நகைக்காக ரமணியை அவர் தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இதையடுத்து கொலை, நகை கொள்ளை பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் முத்தியால்பேட்டையில் பதுங்கியிருந்த பிரவீனை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மேலும் சம்பவம் நடந்தபோது பிரவீனுடன் அவரது மனைவி ஈஸ்வரியையும் உடனிருந்த நிலையில், அவரையும் போலீசார் இவ்வழக்கில் கைது செய்தனர்.

Tags : Katrik ,Puducherry ,Katrik Gol ,Karudupam ,Kenkayamman Temple Road ,
× RELATED நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்: மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவர் கைது