×

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பட்டப்பகலில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தரிக்கோலால் குத்தி கழுத்தை நெரித்து கொலை

* 6 பவுன் நகைகள் கொள்ளை

* அக்கா மகனின் நண்பர் கைது

* விசாரணையில் திடுக் தகவல்கள்

புதுச்சேரி : புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியில் 3 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தரைதள வீட்டில் வசித்து வந்தவர் மணி(48) என்பவரது மனைவி ரமணி(42). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள், அரியூரில் உள்ள தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். மகன், தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

கணவன், மனைவி இருவரும் வீடு அருகே மெயின் ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். வழக்கமாக ஓட்டலுக்கு அதிகாலை 4 மணிக்கே கணவன், மனைவி இருவரும் சென்று விடுவர். காலையில் வேலை முடிந்ததும் மனைவி வீட்டுக்கு திரும்புவார். கணவர், மதியம் திரும்புவது வழக்கம். அதுபோல், நேற்று காலை 11.15 மணியளவில் ஓட்டலில் சமையல் உள்ளிட்ட வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கணவர் மணி, ஓட்டலில் வேலை முடிந்து, மார்க்கெட்டுக்கு சென்று விட்டு, மதியம் 1.45 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார். கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. செல்போனில் அழைத்தும் எடுக்கவில்லை. இதனால் வழக்கமாக கதவு அருகே ஜன்னல் ஓரம் சாவி வைக்கும் இடத்தில் சாவி இருந்ததை பார்த்தார். அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார்.

வீடு பெருக்கப்படாமல் அலங்கோலமாக கிடந்தது. இதனால் அவரே துடைப்பத்தால் வீட்டை சுத்தம் செய்தார். பின்னர், சமையல் அறைக்கு சென்றார். அதன் அறை கதவை திறந்து பார்த்தபோது, பக்கத்தில் துணிகளை உலர்த்துவதற்காக உள்ள சிறிய சந்து பகுதியில் மனைவி ரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணி, கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரமணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கத்தரிக்கோலால் கழுத்து, தலை, நெற்றி, முகத்தில் சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. கழுத்தில் துணி சுற்றப்பட்டு இருந்தது. கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் ஒரு காதில் அணிந்திருந்த கம்மல் பறிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சடலத்தின் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தரிக்கோல் கிடந்தது. தொடர்ந்து, ரமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி. கலைவாணன், வடக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.

தொடர்ந்து, போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ரமணி அணிந்திருந்த 6 பவுன் நகைகள் பறிக்கப்பட்டு இருந்ததால் நகைக்காக இக்கொலை நடந்திருக்கலாம் என்பதையும், நன்கு தெரிந்த நபர் தான் இக்கொலையை செய்திருப்பார் என்பதையும் கணித்தனர். ரமணியின் வீட்டுக்கு வந்த நபர் பற்றி விசாரித்ததில் துப்பு துலங்கியது. ரமணியின் அக்கா மகனின் நண்பரான முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் (25) என்பவர் ஓட்டலுக்கு அவ்வப்போது வந்து செல்வார்.

இதன் மூலம் ரமணியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ரமணி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, நகைக்காக அவரை கத்தரிக்கோலால் குத்தியும், துணியால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த பிரவீனை போலீசார் பிடித்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாவி வைக்கும் இடத்தை அறிந்திருந்த கொலையாளி

வீட்டுக்கு 3 சாவிகள் இருந்தது. ஒரு சாவி கணவரும், இன்னொரு சாவியை மனைவியும், 3வது சாவியை வீட்டில் தங்கியிருக்கும் ரமணியின் அக்கா மகனும் வைத்திருப்பார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஓட்டலை நடத்தியதால், வீட்டுக்கு ஒருவர் மாறி ஒருவர் வருவதால் சாவி தேவைப்படும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.

சில நேரங்களில் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லும்போது ஜன்னல் ஓரம் சாவியை வைத்துச் சென்று விடுவர். அதுபோல் வழக்கமாக வைக்கும் இடத்தில் கொலையாளி பிரவீன் சாவியை வைத்துச் சென்றுள்ளார். சாவி வைக்கும் இடம் ஏற்கனவே அவருக்கு முன்பே தெரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நோட்டமிட்டு திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கொலையாளி

ரமணியின் வீட்டையொட்டி பக்கத்தில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் குடியிருப்பவர்கள், திருச்செந்தூருக்கு நேற்று காலை தான் சென்றுள்ளனர். புறப்படுவதற்கு முன்பு அவர்கள், ரமணியிடம் வீட்டை பார்த்துக்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளனர். கொலையாளி இதை நோட்டமிட்டு திட்டமிட்டு ரமணியை தீர்த்துக் கட்டியுள்ளார்.

பக்கத்து வீட்டில் ஆட்கள் இருந்திருந்தால், ரமணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்திருப்பார்கள். ஆனால் யாரும் இல்லாததால் கொலையை பிரவீன் கச்சிதமாக நிறைவேற்றி தப்பிச் சென்றுள்ளார். நகைக்காக மட்டும் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? ஒருவர் மட்டும் கொலையை செய்தாரா? அல்லது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

கொலை செய்து வீட்டை பூட்டிச் சென்ற கொலையாளி

வீட்டில் ரமணி இருக்கும்போது கதவை வழக்கமாக பூட்ட மாட்டார். ஆனால் ரமணியை வீட்டில் அடித்தும், கத்தரிக்கோலால் குத்தியும், கழுத்து நெரித்தும் கொன்று விட்டு, சாவியால் வீட்டை பூட்டிவிட்டு பிரவீன் சென்றுள்ளார். வீட்டுக்கு வழக்கமாக வந்த கணவர் மணி, கதவை தட்டியும் திறக்காததால், சாவியால் திறந்து வீட்டுக்குள் சென்றார். மனைவி எங்கோ வெளியே சென்றிருப்பார் என கருதி இருந்தார்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக வீடு பெருக்கப்படாமல் இருந்தது. ஓட்டலில் இருந்து வீட்டுக்கு வந்ததும் மனைவி ரமணி, முதலில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து விடுவார். இதனால் கணவர் மணி, மனைவியை திட்டிக்கொண்டே வீட்டை பெருக்கியுள்ளார். பின்னர், மாப் கொண்டு துடைப்பதற்காக மாப்பை எடுக்க கிச்சனுக்கு சென்றபோது தான் மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

கொலையாளி மனைவியிடமும் போலீஸ் விசாரணை

கொலை செய்யப்பட்ட ரமணியின் வீட்டில் அவரது அக்கா மகன் சேதுநாராயணன் (23) என்பவர் தங்கி வந்தார். உணவு டெலிவரி வேலை செய்யும் அவர், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு, பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

அவரது நண்பர் நாவற்குளத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் அவரை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். நேற்று அவருடன் அவரது மனைவி ஈஸ்வரியும் வந்து சென்றுள்ளார். ஆகையால் பிரவீனின் மனைவி ஈஸ்வரியையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Patapagal ,Puducherry ,Karatupam ,Kengayamman Temple Street ,
× RELATED சிறுவனை கட்டாயப்படுத்தி இளம்பெண்...