×

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – சிஜேபி

டெல்லி: சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சோனம் 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதில் நாங்கள் நிம்மதியும் நன்றியும் அடைகிறோம். உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி. உங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒரு தேசம் முழுவதின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளீர்கள். இந்த நாட்டிற்கு உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றாலும், ஒன்றிய அமைச்சர் தர்மந்திர பிரதான் பதவி விலகும் வரை, ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அமைதியான போராட்டம் தொடரும் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மோடி அரசு பாதுகாப்பது வெட்கக்கேடானது. கோடிக்கணக்கான மாணவர்களை விட, தோல்வியடைந்த, திறமையற்ற ஒரு அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால், பிரதமர் மோடியை பதவி விலகக் கோரி போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

நீட் முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடியின் பதில் போதுமானதாக இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக இன்றும் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

 

Tags : Sonam Wangchuk ,Union Minister ,Dharmendra Pradhan ,CJP ,Delhi ,Jantar Mantar ,Abhijit Deepke ,Cockroach Janata Party ,X ,
× RELATED டெல்லியில் 5ஆம் நாளாக போராடும்...