×

வந்தே மாதரம் பாடலை அவமதித்தல் கடும் தண்டனை: மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

டெல்லி : வந்தே மாதரம் பாடல் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ குற்றமாகக் கருதி சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலை முழுவதும் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அரசு நிகழ்ச்சிகள் துவக்கத்திலும், இறுதியிலும் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இப்பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ சிறை தண்டனை கிடைக்க வழி வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார்.

1971 ஆம் ஆண்டு தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசிய கீதத்தைப் போலவே தேசியப் பாடலுக்கும் சட்டப் பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது. தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற முக்கிய சின்னங்களுக்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதே இதன் நோக்கம். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜான் பிரிட்டாஸ், சந்தோஷ்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இச்சட்டத் திருத்தம் தனிமனித சுதந்திரம் மற்றும் கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு முழுமையான சட்டமாக அமலுக்கு வரும்.

 

Tags : Vande Mataram ,Delhi ,Vande Madaram ,Bankim Chandra Chatterjee ,
× RELATED தைராய்டு பாதிப்பால் உடல் எடையை...