திருவள்ளூர், ஜூலை 24: திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னியம்மாள் (52). நேற்று முன்தினம் பொன்னியம்மாள் அவரது கணவர் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் பூதூரில் உள்ள வீட்டில் இருந்தனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, துரை ஆகியோர், ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு பொன்னியம்மாளையும், அவரது கணவர் மற்றும் மருமகனையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பொன்னியம்மாள், புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து, முன்பகை காரணமாக பெண்ணை தாக்கிய ஏழுமலை, துரை ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரனை நடத்தி வருகின்றனர்.
