×

நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டத்தில் அரசு பள்ளிக்கு ரூ.36 லட்சம் நிதியுதவி வழங்கிய முன்னாள் மாணவர்

 

திருத்தணி, ஜூலை 18: அரசுப் பள்ளியை மேம்படுத்த, ‘நம்ம ஊரு… நம்ம பள்ளி’ திட்டத்தில் ரூ.36 லட்சம் நிதி வழங்கிய முன்னாள் மாணவருக்கு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர். திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 450 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். முழுக்க முழுக்க கிராமப்புற மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர் முரளி, உயர் கல்வி முடித்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அவர் படித்த பள்ளியை மேம்படுத்தி மாணவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கல்வியில் ஊக்கப்படுத்தும் வகையில், ‘நம்ம ஊரு… நம்ம பள்ளி’ திட்டத்தில் பள்ளியை மேம்படுத்தும் வகையில் ரூ.36 லட்சம் நிதி வழங்கினார்.

அந்த நிதியில் பள்ளியில் மாணவியருக்கு நவீன் கழிப்பிடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள், நாற்காலிகள், ஆசிரியர்களுக்கு இருக்கைகள், பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் சீரமைத்து பேவர் பிளாக் கற்கள் அமைப்பு, பள்ளி முகப்பு பகுதி சுவர்களில் தேச தலைவர்கள் படங்கள் வரையப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி முன் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட நேற்று பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் முரளியை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்பு வழங்கினர்.

முன்மாதிரி பள்ளியை மேம்படுத்த பெரும் உதவி செய்த முரளிக்கு, மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். வறுமை கல்விக்கு இடையூறாக இருக்க கூடாது என்றும் 10, 12ம் வகுப்புகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவரக்ளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருகிறேன். கல்வியில் கவனம் செலுத்தி வாழ்வில் உயர்ந்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்று மாணவர்களை முரளி கேட்டுக் கொண்டார்.

 

Tags : Tiruttani ,Thiruvalangadu Union Punimangadu Government Higher Secondary School ,
× RELATED திருத்தணி காவல் நிலையம் அருகே...