திண்டுக்கல், ஜூலை 23: திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இதில் நடக்க முடியாதவர்கள், ஊனம் கடுமையான பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கான சுகாதார வளாகம் முறையாக இல்லை. அவர்களுக்காக ஒரு கழிப்பறை மட்டுமே அலுவலகத்தின் உள்பகுதியில் உள்ளது. அங்கே மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து கூடுதல் கழிப்பறை கட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 15வது நிதிக்குழு மானியத்தில் துாய்மை பாரத இயக்கம் 2025- 2026ன் கீழ் ரூ.3,70,000 லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான சுகாதார வளாகம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணத்தில் ரூ.பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மாதக்கணக்கில் காட்சி பொருளாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் வசதி ஏற்படுத்தி சுகாதார வளாகத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்ட போது கூறியதாவது: போதிய தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு தற்போது ஆழ்குழாய் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.
