பெரம்பலூர், ஜூலை 23: நெய்குப்பை, மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் முன்பாக பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வங்கி செயலாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்குப்பை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் மேட்டுப் பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி முன்பாக, நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அகரம் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பையா மற்றும் அழகேசன், ஒன்றிய செயலாளர் மருதை மற்றும் வெங்கடேசன், மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் முடிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்களிடம் விவசாயிகள் வாங்கிய பயிர் கண்களை தள்ளுபடி செய்யக்கோரி கோரிக்கை மனுகள் அளிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் நெய் குப்பை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பயிர் சாகுபடியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
