கோவை: கோவை வாலாங்குளம் பகுதியில் இளம் ஜோடிகள் லீலையை பார்க்க மறைந்திருந்த வாலிபர் போலீசில் சிக்கினார். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அழகுபடுத்தப்பட்டது. இதில், வாலாங்குளக்கரை சீரமைக்கப்பட்டு அங்கு ஊஞ்சல், நடைபாதை, இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இங்கு இளம் ஜோடிகள் மற்றும் முறையற்ற உறவை பின் தொடர்பவர்கள் இரவில் அத்துமீறுவதாகவும் புகார் உள்ளது. மேலும், மாலை வேளைகளில் ஏராளமான ஜோடிகள் குளக்கரையில் உட்கார்ந்து இயற்கையை ரசிப்பது வழக்கம். இரவில் நீண்ட நேரம் யாராவது அங்கு இருந்தால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் இருக்கவும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள மின் கேபிளை வெட்டிக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் அதே வாலிபர் அங்குள்ள இருளில் மறைந்து நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த பாதுகாவலர்கள் சிலர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.
அதில், அந்த வாலிபர் தம்பதிகள், இளம் ஜோடிகள் யாராவது இரவில் அங்கு லீலையில் ஈடுபட்டால் மறைந்திருந்து அதனை பார்ப்பதற்காகவும், தன்னை யாரும் கண்டு பிடிக்க கூடாது என்பதற்காக மின் கேபிளை வெட்டி இருளை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. அவர் கணபதி பகுதியை சேர்ந்த பிரசாத் (22) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு பைக், ஒரு ஐபோன், ஒயர் கட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
