பெரம்பூர்: ‘’தன்னுடன் வாழவேண்டும்’ என்று வீடுதேடி சென்று பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவருக்கு 11 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர், முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். 2011ம் ஆண்டு விநாயகபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது பத்மநாபன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், அந்த பெண் பிரிந்துவிட்டார்.
இந்த நிலையில், பத்மநாபன் மீண்டும் அந்த பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டும் அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு நேரில் சென்றும் தன்னுடன் சேர்ந்து வாழும்படி தொல்லை கொடுத்துள்ளார். ‘’உன்னால் தான் என் மனைவி பிரிந்து சென்றுவிட்டார் நீ மட்டும் உனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கிறாயா’’ என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில், பத்மநாபன் அந்த பெண்ணின் வீட்டுக்கே நேராக சென்று அவரது கணவரிடம், ‘’உனது மனைவி என்னுடன்தான் இருந்தார். அவரை என்னுடன் அனுப்பிவிடு’’ என்று கூச்சல் போட்டுள்ளார். இதனால் கடும் வேதனை மற்றும் அவமானம் அடைந்த பெண், வீட்டில் இருந்த எலி பவுடர், எரும்பு பவுடரை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மயக்கம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பெண்ணின் புகாரின்படி, ராஜமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து திருவிக நகர் கே.சி.கார்டன் 3வது தெருவை சேர்ந்த பத்மநாபனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
