×

ஈரான்–அமெரிக்கா மோதல்: பொருளாதார நெருக்கடி தாக்கத்தை இந்தியா திறம்பட சமாளிப்பது எப்படி?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய கிழக்கில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் போரால், உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முற்றிலும் மூடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது நடந்தால், எண்ணெய் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய விநியோகத் தடையாக இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) குறிப்பிட்டுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், இந்தப் போர் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவின் சாமர்த்தியமான பொருளாதாரக் கொள்கைகளும், ராஜதந்திர நடவடிக்கைகளும் இந்த மிகப்பெரிய எண்ணெய் நெருக்கடியை எதிர்கொள்ள நாட்டுக்கு பாதுகாப்பு அளித்துள்ளதாக சில ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஹார்முஸ் நீரிணையை இந்தியா பெருமளவில் நம்பியிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா தனது இறக்குமதி வழித்தடங்களைப் பல்வகைப்படுத்தியுள்ளது. தற்போது ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதனால், ஹார்முஸ் நீரிணையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவைக் கண்டது. மேலும் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கை மீறும் அபாயம் ஏற்பட்டதால், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதே நேரத்தில், எண்ணெய் நிறுவனங்களும் தற்காலிகமாக விலையை உயர்த்தாமல், ஒரு பகுதி இழப்பை ஏற்றுக்கொண்டன.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் பெரிய நெருக்கடி நிலவிய போதிலும், இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்று ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. மேலும், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மேலாண்மை மற்றும் வலுவான அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவை பொருளாதாரத்திற்கு பாதுகாப்பு அரணாக அமைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து மாற்று பைப்லைன் வழியாக எண்ணெய் விநியோகம் செய்ததும் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தது.

இருப்பினும், சமையல் எரிவாயு (LPG) மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கடுமையான சவால்கள் நீடித்தன. இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் சுமார் 90% ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. கத்தாரின் ராஸ் லஃபான் ஏற்றுமதி முனையம் பாதிக்கப்பட்டதால், எரிவாயு விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டன.

எது எப்படியிருந்தாலும், இந்த எண்ணெய் நெருக்கடி இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தெளிவான பொருளாதாரக் கொள்கைகள், வலுவான நிதி மேலாண்மை மற்றும் இறக்குமதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தும் அணுகுமுறை இருந்தால், உலகளாவிய நெருக்கடிகளையும் திறம்பட சமாளிக்க முடியும் என்பதை இந்தியா மீண்டும் நிருபித்துள்ளது.

Tags : Iran—US ,India ,Iran ,United States ,Middle East ,Israel ,
× RELATED 1600 தங்கக் கட்டிகள் கடத்தல் இந்திய வம்சாவளி மலேசியருக்கு 3 ஆண்டு சிறை