×

உலக கோப்பைக்கு தயாராக உடல்தகுதி முக்கியம்…: கேப்டன் கில் கவலை

 

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கு தயாராக, வீரர்கள் நல்ல உடல்தகுயுடன் இருப்பது அவசியம் என இந்திய அணி கேப்டன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா-இங்கிலாந்து அணிகளிடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா 27 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன் குவித்த நிலையில் (டக்கெட் 141, பெத்தெல் 91, ரூட் 74*, பட்லர் 41*), அடுத்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன் மட்டுமே எடுத்தது.ரோகித் 138, கில் 77, கோஹ்லி 74 ரன் விளாசினாலும், ஸ்டிரைக் ரேட் போதுமான அளவுக்கு இல்லாததால் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர். இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பெத்தெல் ஆட்ட நாயகன் விருதும், ஜோ ரூட் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடர்களிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்படுவதும் அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பைக்கு தயாராக வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். அடுத்தடுத்து முக்கியமான வீரர்கள் காயத்தால் விலகுவது கவலை அளிக்கிறது என்று கேப்டன் கில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் 5 வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒன்று அல்லது இரண்டு பேருக்கு காயம் என்றால் சமாளிக்கலாம். ஒரேயடியாக இத்தனை பேர் விலகினால், வியூகம் அமைப்பதும் அதை செயல்படுத்துவதும் சிரமம். உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொண்டால், உடல்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே நமது இலக்கை அடைய முடியும். பயிற்சியாளர்கள், தேர்வுக் குழுவினர்,, கிரிக்கெட் வாரியம் என அனைத்து தரப்பும் இதில் ஒருங்கிணைந்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பது அவசியம். ரோகித் ஷர்மா ஓய்வு பெறுவது குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அதுபோன்ற எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை. இவ்வாறு கில் கூறியுள்ளார்.

Tags : World Cup… ,Gill ,ODI ,England ,World Cup ,India ,England… ,
× RELATED ஜூனில் சிறந்த வீரர் நாதன்ஸ்மித்: ஐசிசி அறிவிப்பு