தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி(60). இவர்களுக்கு மேனகா (38), மௌனிகா (25) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் செல்வராஜுக்கும், விஜயலெட்சுமிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம்தர விஜயலெட்சுமி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் 13 ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.
மேனகா திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். மௌனிகாவுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்த விஜயலெட்சுமி, மேனகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மௌனிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை நகர போலீசார் செல்வராஜ் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
