×

நைட்டியை கவுன் மடலில் அணிவதுதான் இன்றைய பேஷன்!

நன்றி குங்குமம் தோழி

ஆரம்பித்து ஐந்து வருடமே ஆனாலும் ஐம்பது வருட அனுபவ நிறுவனம் போல் திறம்பட இயங்கி வருகிறார் லட்சுமி பிரியா. இவர் மதுரையில் செல்லூர் ஐம்பதடி ரோட்டில் சன் கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் நைட்டிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பெரிய அகன்ற இடம். அங்கு அதி நவீன தையல் மிஷின்களில் பெண்கள் பலர் சுறுசுறுப்பாக டிசைன் டிசை னாக நைட்டிகளை தைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை மேற்பார்வையிட்டு வந்தவரை சந்தித்தோம். ‘‘நான் பிறந்து வளர்ந்தது, பள்ளிப் படிப்பு, நான்கு வருட பொறியியல் பட்டப்படிப்பு முடிச்சது எல்லாம் மதுரையில்தான். நான் வீட்டில் ஒரே குழந்தை என்பதால், என் பெற்றோர் என் மீது அளவு கடந்த அன்பு, பாசம் வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட நான் ராஜகுமாரி போலதான் வளர்ந்தேன். எங்களுடையது நடுத்தர குடும்பம்தான். அப்பா வீட்டின் எதிரிலேயே சிறிய தகர செட் அமைத்து அங்கு கேஸ் அடுப்பில் பல வகையான வடை, போண்டா, பூரி மசாலா என காலை, மாலை இருவேளையும் தயாரித்து வந்தார். அவரின் உணவுகள் நல்ல சுவையாகவும் இருக்கும். எங்க ஏரியாவில் அப்பாவை ‘வடை மாமா’ன்னுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க.

சாதாரண தொழிலாளர்கள் முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் அப்பாவின் சிற்றுண்டியை சாப்பிட விரும்பி வருவார்கள். அம்மா சத்துணவு கூட சூப்பர்வைசரா வேலை பார்த்து வந்தார். அம்மா வேலைக்குப் போவதால், அப்பாவே கடைக்கு தேவையான மாவு மற்றும் அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார். நான் வீட்டில் செல்லப்பெண் என்பதால், என்னை எந்த வேலையும் இருவரும் செய்ய விடமாட்டார்கள். அப்படியே நான் உதவ சென்றாலும், ‘‘நீ நன்கு படித்தால் மட்டும் போதும்” என்று அம்மாவும் எந்த வீட்டு வேலையும் எனக்கு தர மாட்டார்கள். ‘நீ படிப்பில் மட்டுமே கவனம் செலுத்து’ன்னு சொல்லிட்டாங்க. நானும் நன்றாக படிச்சேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்.

காரணம், என் அப்பா. அவர் வெயில், மழை பார்க்காமல் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அவரை நான் சம்பாதித்து நன்றாக பார்த்துக் கொள்ளணும்னு நினைச்சேன். ஆனால், அப்பாவுக்கு ஓய்வு எடுக்க விருப்பமில்லை. 2002ல் எனக்கு திருமணமானது. என் கணவர் மதுரையில் ஜவுளித்துறை பிசினஸ் செய்து வந்தார். 72 வயது வரை அப்பா அவரின் சிற்றுண்டி கடையினை நடத்தி வந்தார். அதன் பிறகு அவருக்கு உடல் நிலை பாதித்தது. அவரின் 82 வயதில் மூப்பு காரணமாக காலமானார். அதன் பிறகு அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றவர் நைட்டி பிசினஸிற்குள் வந்தது பற்றி கூறினார்.

‘‘எனக்கு சிறுவயதில் எம்பிராய்டரி செய்ய பிடிக்கும். ஓவியமும் வரைவேன். கணவர் ஜவுளி துறையில் இருந்ததால், அவரிடம் சில நுட்பங்களையும் கற்ற போது எனக்கு ஜவுளி பிசினஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. என் விருப்பம் புரிந்து என் கணவர் என்னை ஊக்குவித்து பெண்களுக்காக நைட்டிகளை தயாரிக்க சொன்னார். 2021ம் ஆண்டில் நான் என் பிசினஸை துவங்கினேன். இன்று வரை என்னுடைய வெற்றிக்கு அவர் முழு ஒத்துழைப்பு தருகிறார்.

முழுக்க முழுக்க நைட்டியினை பெண்களை மட்டுமே கொண்டு தயாரிக்கிறேன். இதற்காக ராஜஸ்தான், அகமதாபாத், மும்பை போன்ற இடங்களில் இருந்து புகழ்பெற்ற நிறுவனங்களிடம் தரமான துணிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்கிறோம். மேலும், ஒரே துணியினை போல் போலிகளும் இருப்பதால், நாங்க வாங்கும் துணியினை முதலில் லேப் டெஸ்டிற்கு தந்த பிறகுதான் அதனை பயன்படுத்துகிறோம். துணியின் தரம் நன்றாக இருப்பதால், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பல ஜவுளி நிறுவனங்கள் எங்கள் நைட்டிகளை வாங்கி விற்பனை செய்கிறார்கள். சில நிறுவனங்கள் டீலர்கள் மூலமாகவும் எங்களிடம் நைட்டியினை வாங்குகிறார்கள்.

நைட்டி ஒவ்வொன்றையும் நான்தான் டிசைன் செய்கிறேன். நான் சொல்லும் டிசைன்களை அப்படியே தைத்து தந்துவிடுவார்கள் என் ஊழியர்கள். சொல்லப்போனால் அவர்கள் தான் என் பலமே. நான் ஃபேஷன் குறித்து தனிப்பட்ட படிப்பு எல்லாம் படிக்கவில்லை. யுடியூப், தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களை பார்த்துதான் வடிவமைப்பு செய்வதை கற்றுக் கொண்டேன். ஒரு நாளைக்கு 1500 நைட்டிகளை தயாரிக்கிறோம். கிட்டத்தட்ட 50 பெண்கள் எங் களிடம் வேலை பார்க்கிறார்கள்.

தையல் ஆர்வம் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகையுடன் சிறப்பு பயிற்சி நாங்க அளிக்கிறோம். அதில் சிலரால் வேலைக்கு என்று வரமுடியாது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே நைட்டியினை தைத்து தரவும் ஏற்பாடு செய்து தருகிறோம். இதன் மூலம் அவர்களுக்கும் ஒரு சம்பாத்தியம் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே 100க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் எனக்காக வேலை பார்க்கிறார்கள்’’ என்றவர், கடும் உழைப்பினால்தான் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

‘‘எந்த துறையில்தான் போட்டி இல்லை. ஜவுளி பிசினஸும் அதற்கு விதிவிலக்கல்ல. கடும் உழைப்பு, நேர்மை, தரம், நேரம் தவறாமை இந்தத் தொழிலுக்கு மிகவும் அவசியம். அதை நாங்க பின்பற்றி வருகிறோம். ஒரு தீபாவளி நள்ளிரவு அன்று எங்கள் நிறுவனம் அருகிலுள்ள கண்மாய் உடைந்துவிட்டது. எங்க நிறுவனத்திற்குள் வெள்ளம் புகுந்தது. அந்த சமயத்தில் என் ஊழியர்கள்தான் துணி பண்டல்கள் நீரில் மூழ்கி வீணாகி விடாமல் பத்திரமாக உயரமான இடத்தில் வைத்தார்கள். இல்லை என்றால் பல துணிகள் பாழாகி இருக்கும். அதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்த்துவிடும்.

‘நைட்டி’ பெரும்பாலும் இரவில் அணியும் உடை என்றுதான் நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் அதனை வெளியே ஒரு உடையாக அணிந்து செல்லும்படி டிசைன் செய்ய இருக்கிறோம். பெரியவர்கள் மட்டுமில்லாமல் இளம் வயதினருக்கான உடையாகவும் டிசைன் செய்கிறோம். இளம் பெண்கள் முதல் அனைத்து வயதுப் பெண்களும் விரும்பும் வண்ணம் நைட்டியை கவுன் மாடலில் துப்பட்டாவுடன் தருகிறோம். நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ரீடெயில் கடைகளுக்கு நேரடி விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். குறைந்த பட்ஜெட் விலையில் தரமான டிசைன்கள் கொடுக்க இருக்கிறோம்’’ என்றார் லட்சுமி பிரியா.

தொகுப்பு: விஜயா கண்ணன்

 

Tags : Lakshmi Priya ,Sun Garments ,Cellur Fifty Road ,Madura ,
× RELATED சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயலி Bachatt App