×

புகையிலைக்கு எதிராக போராடும் செவிலியர்!

நன்றி குங்குமம் தோழி

“புகை, மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக என் அப்பாவை இழந்தேன். அந்த வேதனை இன்னொரு குடும்பத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே இன்று பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை புகையிலையிலிருந்து மீட்கும் பணியில் இருக்கிறேன்” என்கிறார் ஈரோடு மாவட்ட புகையிலை தடுப்பு சமூக ஆர்வலர் சங்கீதா. செவிலியராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய அவர், இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

“2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்தாண்டுகள் செவிலியராக பணியாற்றி வந்தேன். தற்போது புகையிலை தடுப்பு சமூக ஆர்வலராக சேவையாற்றுகிறேன். அப்பாவிடம் புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இருந்தது. இதன் விளைவாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை காலங்களின் போது மருத்துவமனையில் அப்பாவுடன் இருந்தேன். புற்றுநோயின் தீவிரமான தாக்கத்தினால் அப்பா உயிரிழந்தார்.

ஒரு செவிலியராக இருந்தும் அப்பாவை புகைப் பழக்கத்திலிருந்தும், புற்றுநோயிலிருந்தும் மீட்க முடியவில்லையே என்கிற குற்ற உணர்வில் பணியை தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்தேன். அந்த சமயத்தில்தான் அரசு சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான அழைப்பு வெளியிட்டிருந்தார்கள். நான் ஒரு செவிலியர் மட்டுமின்றி மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படிப்பையும் முடித்திருக்கிறேன்.

இந்த சேவைக்கு பொருத்தமாக இருப்பேன் என்று முயற்சித்தபோது, ஈரோடு மாவட்டத்தின் மாவட்ட புகையிலை தடுப்பு சமூக சேவகராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. புகையிலை பழக்கத்தால் என் அப்பாவை போல் வேறு யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த எனக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சரியான நோக்கமாக அமைந்தது. மட்டுமின்றி நான் செவிலியராக பணியாற்றும்போது புகையிலை பழக்கத்தால் பல்வேறு நோய் தாக்கத்திற்கு ஆளானவர்களை கண்டாலே கவலையாக இருக்கும். 2022ல் தொடங்கிய புகையிலை தடுப்பு சமூக ஆர்வலர் சேவை இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி, பொது நிகழ்வுகள் போன்றவற்றில் போதையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“இன்று ப்ரீ கேன்சர் ஸ்டேஜில் இருக்கும் பலருக்கும் புகையிலை மற்றும் ஆல்கஹால் பழக்கமே 90% புற்றுநோய்க்கான காரணம் என்கின்றனர். புகையிலை தடுப்பு நடவடிக்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். புகைப்பழக்கத்திற்கு அடிமையான சிறார்களை மீட்டு கவுன்சிலிங் கொடுத்து அப்பழக்கத்திலிருந்து மீளும் வரை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்துகிறேன். இந்தாண்டு முதல் ஆலோசகராகவும் செயலாற்ற தொடங்கியதிலிருந்து 372 மாணவர்களை கவுன்சிலிங் மூலம் புகைப் பழக்கத்திலிருந்து மீட்டிருக்கிறேன். ஈரோடு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறேன்.

புகைப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள், உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து விளக்கமாக பேசியவுடன், உங்களில் யாருக்காவது இப்பழக்கம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்… அதை சரி செய்துவிடலாம் என்று கேட்டுவிட்டு நேரம் கொடுப்பேன். ஆனால், உடனேயே யாரும் தங்களுக்கு இந்தப் பழக்கம் இருப்பதாக வந்து சொல்லமாட்டார்கள். நோய் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை காண்பித்து இது போன்ற ஆபத்துகள் ஏற்படலாம். ப்ரீ கேன்சர் ஸ்டேஜ் வராமல் இருக்க வேண்டும் எனில், இதனை சரி செய்து கொண்டால் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் என்பதை எடுத்து சொல்வேன். ‘நான் கொஞ்ச நேரம் இங்குதான் இருப்பேன், யாருக்காவது என்னிடம் பேச வேண்டும்…

ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை வந்து பாருங்க’ என்று சொல்லி காத்திருப்பேன். ஒவ்வொருவராக என்னிடம் வந்து பேசுவார்கள். அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவிட்டு கவுன்சிலிங் கொடுத்து, “உன்னால் இதை மாற்றிக்கொள்ள முடியும், எந்த ஆபத்தும் வராது” என்று நம்பிக்கை தருவேன். அடுத்தமுறை அதே பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும் போது, “மேடம் நான் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டேன், இப்போ நல்லா இருக்கேன் மேம்” என்று என்னிடம் வந்து சொல்வார்கள். நாம் எடுக்கும் முயற்சியில் 50% சிறார்களிடம் இருந்து நல்ல ரிசல்ட் வருகிறது எனில், அதுவே சக்சஸ்தான்” என்றவர், புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை கையாளும் விதம் மற்றும் சவால்கள் குறித்து பகிர்ந்தார்.

“18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குத்தான் பெரும்பாலும் இந்தப் பழக்கம் இருப்பதாக தெரிந்தது. குடும்ப பிரச்னைகள், ஒற்றை பெற்றோர் அல்லது பெற்றோரின்றி தாத்தா-பாட்டி கவனிப்பில் இருப்பது போன்ற காரணிகளால் அவர்கள் மனரீதியாக தனிமையை தேடுகிறார்கள். இந்த சமயத்தில் கண நேரத்திற்கு சந்தோஷமளிக்கும் விஷயங்களுக்கு அடிமையாகின்றனர். சிலர் தொடக்கத்தில் அதிக போதை தரக்கூடிய பொருட்களை பழக்குகின்றனர். பாலின வேறுபாடுகளின்றி எல்லோரும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

யாரும் தனியாக கூப்பிட்டால் போகக்கூடாது, இலவசமாக கொடுக்கிறார்கள் என்பதால் எதையும் வாங்கக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்துவோம். மிகவும் சுலபமாக சில போதைப் பொருட்கள் கிடைத்துவிடுவதால், வகுப்புகளில் கூட வாயில் வைத்தபடி இருப்பார்கள். தனியாக சிரிப்பது, பேசுவது, தனிமையை அதிகமாக விரும்புவது போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆசிரியர்களிடம் அவர்களை கண்காணிக்க சொல்லுவோம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலும் மன அழுத்தம். எப்போதாவது ஒன்று என்பதில் தொடங்கி ஒருநாளுக்கு ஒரு பேக் என்று அதிகரிக்கும். நண்பர்கள் ஒன்றுகூடும் இடங்கள், தனியாக இருக்கும் போதும் புகை பிடிப்பார்கள். இவ்வாறு எந்தக் காரணமாக இருந்தாலும் ப்ரீ கேன்சர் ஸ்டேஜில் இருப்பவர்களை பார்க்கமுடிகிறது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இப்பழக்கங்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்கு குறுகிய கால சந்தோஷத்தை அளிக்கிறது. சிகரெட் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு உள்ளே சென்று ரத்தத்தில் முழுவதுமாக பரவும்போது, மூளையில் ஹேப்பி ஹார்மோன் சுரக்கும். இது அவர்களை அடிமையாக்கிவிடுகிறது. பசியின்மை, அதிகப்படியான கோவம், எரிச்சல், தனிமை, கடுமையான பேச்சு, படிப்பில் சரிவு, குடும்பத்துடன் சேராமல் எதையோ இழந்ததை போலவே இருப்பார்கள்.

அதன் தீவிரத்தன்மை வீட்டில் உள்ளவர்களையோ ஆசிரியர்களிடமோ கடுமையாக பேசி அடிக்க சென்றுவிடுவார்கள். இது போன்ற மாணவர்களுக்கு உளவியல் சிகிச்சை, தியானப் பயிற்சி கொடுத்து சரி செய்த பின் பள்ளிக்கு அனுப்புவோம். கவுன்சிலிங் கொடுக்கும் போது அம்மா அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாலும் சிறுவன் சிரித்துக் கொண்டிருப்பான். நேருக்கு நேர் பார்த்தும் பேசமாட்டார்கள்” என்று விளக்கியவர், புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பகிர்ந்தார்.

“புகை மற்றும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உணவு, தூக்கம் அவசியம். தவறாமல் கவுன்சிலிங் வர வேண்டும். சிலர் ஹலோசினேஷன் இருக்கும் போது தன்னையே அறியாமல் பிறரை தாக்கும் அளவிற்கு கடுமையாக நடந்துகொள்ளக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டும். சிறார்களிடையே நட்பு ரீதியான அணுகுதல் இருந்தால்தான் எதையும் பகிர்ந்து கொள்வார்கள். பெற்றோர்களின் தொடர் கண்காணித்தல் மிகவும் முக்கியம்.

அவர்களிடம் பணப்புழக்கம் இருந்தால் கவனிக்க வேண்டும். இன்றைய தலைமுறையை நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டும். எனவே வருங்கால சமுதாயம் புகை மற்றும் போதைப் பழக்கம் இல்லாததாக உருவாக்க வேண்டும். நர்சிங் பணியை தொடராமல் புகையிலை தடுப்பு சமூக ஆர்வலராக சேவையாற்றுகிறேன். என்னால் முடிந்தவரை அனைவரையும் மீட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’’ என்று தன் இலக்கை முன்வைத்தபடி பேசி முடித்தார் சங்கீதா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Kungumam Dozhi ,Erode District Tobacco Prevention… ,
× RELATED ‘நோ’ (No) சொல்லப் பழகுங்கள்!