×

கம்பீரமான குரல் அலட்சியமான நடிப்பின் ..! பி.எஸ்.ஞானம்

நன்றி குங்குமம் தோழி

 செல்லுலாய்ட் பெண்கள்

காதளவோடிய பெரிய விழிகள் என்பதை அவரது விழியசைவுகளும் அகன்ற விழிகளும் பல படங்களில் பட்டவர்த்தனமாக்குகின்றன. சற்றே ஒரு சாயலிலும் உயரத்திலும் நம் சம காலத்தில் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த ‘ஆச்சி’ மனோரமாவை நினைவுறுத்தும் தோற்றம். ஆனால், அவரைக் காட்டிலும் வெடுக்கென்ற பேச்சு போன்றவை ஞானத்தின் தனித்துவம் மிக்கதோர் அடையாளங்கள். வில்லியாகவும் விழிகளைச் சுழற்றுவார். குணச்சித்திரம் மிக்க பாத்திரங்களிலும் கலங்க வைப்பார்.

பொள்ளாச்சி ஞானாம்பாள் என்ற பெயரில், பொள்ளாச்சி போன்ற அற்புதமானதோர் இயற்கைச்சூழல் நிறைந்த கொங்கு மண்ணில், 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாளன்று பிறந்தவர். தந்தையார் குஸ்தி வாத்தியாராக அறியப்பட்ட சிலம்பப் பயிற்சியாளர். வர்மக்கலை குறித்தும் நன்கு அறிந்தவர் அவர். ஞானம் சிறு வயதிலேயே அக்கால வழக்கப்படி திண்ணைப் பள்ளியில் பாடம் பயின்றவர். சிறு வயது முதலே ஆடல், பாடல் போன்றவற்றிலும் ஓர் அதீத ஈடுபாடு இருந்துள்ளது அவருக்கு. தொடர்ச்சியாக நாடகங்களை பார்த்து வளர்ந்ததும், பின்னர் அடுத்தக்கட்டமாக திரைப்படங்களின் வருகையும் அதன் மீதான ஈடுபாடுமாக இருந்தவர்.

1937 ஆம் ஆண்டில் வெளியான ஒட்டுமொத்தத் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 36. அதற்கு சற்றேறக் குறைய ஒரு சில ஆண்டுகள் முன்பு வரையிலும் பதினைந்து அல்லது இருபது எண்ணிக்கை வரையிலான படங்கள்தான் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. 1937 ஆம் ஆண்டில் 36 என்ற இந்த எண்ணிக்கை சற்றே அதிகம்தான். ’மைனர் ராஜாமணி’ திரைப்படமும் அதில் ஒன்று. பெரும்பாலும் புராண, இதிகாசப் படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த அக்கால நிலையில் அத்திப் பூத்தாற்போல் ஆங்காங்கே ஒரு சில சமூகக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களும் வெளிவர ஆரம்பித்திருந்தன.

அவற்றில் ஒன்றுதான் ‘மைனர் ராஜாமணி’. புராண, இதிகாசக் கதைகள் மட்டுமல்லாமல், துப்பறியும் நவீனங்களும் வெளிவரத் துவங்கியிருந்த காலம்.‘மைனர் ராஜாமணி’யும் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் கதைதான். தன் பதினேழு வயதில் ‘மைனர் ராஜாமணி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். பி.எஸ். ஞானம் என்ற பெயரே திரையுலகில் அவரை அடையாளப்படுத்தியது. ஒரே மாதிரியான வேடங்கள் என ஒரு சிறு வட்டத்துக்குள் தன்னை குறுக்கிக்கொண்டு விடாமல், அனைத்துவிதமான வேடங்களையும், கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் அளவுக்குத் தன் திறமையை வளர்த்துக் கொண்டவர் ஞானம்.

தோழி கதாபாத்திரம் தொடங்கி வில்லி, அம்மா, அக்கா, தங்கை, அண்ணி என அனைத்துப் பாத்திரங்களும் அவருக்குக் கைவந்த கலையானது. மிக நன்றாகப் பாடவும் வந்தது ஞானத்துக்கு… அவருடைய ஆரம்ப காலப் படங்களில் எல்லாம் அவர் தன் சொந்தக் குரலில் பாடல்களை பாடியிருக்கிறார். பல பாடல்கள் இப்போதும் யூ டியூபில் கிடைக்கின்றன. எவ்வளவு கம்பீரமான குரல் அவருக்கு என்பதை அவரது ஒவ்வொரு பாடலும் நிரூபிக்கின்றன.

‘சந்தனத்தேவன்’ படத்தில் இளவரசியின் தோழி கனகமாக நடித்திருப்பார். நடிப்பு மட்டுமல்லாமல், அரண்மனை வாசிக்கே உரிய ராஜ தந்திரம், குதிரையேற்றம், வாள் வீச்சு என அத்தனையையும் கனகச்சிதமாகச் செய்திருப்பார். பெரும்பான்மையான காட்சிகள் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதாவும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருப்பார். ஏற்காடு மலையடிவாரத்தில் அமைந்திருந்த ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டுடியோ, மலை, காடுகள், நதிக்கரை என வஞ்சமில்லாமல் படம் பிடித்துத் தள்ளியிருப்பார்கள்.

‘சரியென்று ஒரு வார்த்தை நீ தயவு செய்து சொல்லு…’ 1948 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘லட்சுமி விஜயம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. பாகவதர் காளி என்.ரத்தினம் தன்னிடம் இசை கற்றுக்கொள்ளும் மாணவி பி.எஸ்.ஞானம், ‘இசை கற்றுத் தருவதை எப்போதுதான் முடிப்பீர்கள்?’ என்று கேள்வி எழுப்ப, பாடல் வடிவில் பதிலளிப்பார். இது ஒரு நகைச்சுவைப் பாடலும் கூட. இருவருமே தங்கள் சொந்தக் குரலில் பாடுகின்ற பாடல். பி.எஸ். ஞானத்தின் குரல் எந்தப் பிசிறும் இல்லாமல் மிகத் தெளிவாக
வும் கம்பீரமாகவும் கணீரென்றும் இப்பாடலில் ஒலிக்கும்.

கெடுபிடிக்குப் பெயர் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் கெடுபிடிக்குப் பெயர் போனவர் என்று சொல்லப்படுவதுண்டு. படப்பிடிப்புத் தளங்களில் சக நடிகைகளுடன் ஆண்கள் எவரும் அநாவசியமாகப் பேசக்கூடாது என்பதில் தொடங்கி, படப்பிடிப்பு நேரம் தவிர, பிற நேரங்களில் சக நடிக, நடிகையர் எவரும் நாற்காலிகளில் அமரக் கூடாது என்பது வரையிலும் மிகுந்த கண்டிப்பும் கறாருமானவர் என்று சொல்லப்படுவதுண்டு. படப்பிடிப்பு தவிர்த்த நேரங்களில் நாற்காலியில் அமர்வதற்கான அனுமதியையும் டி.அர்.சுந்தரத்திடம் தனக்கு மட்டுமல்லாமல், சக கலைஞர்கள் அனைவருக்குமாகக் கேட்டுப் பெற்றவர் நடிகை பி.எஸ். சரோஜா அவர்கள்தான். நீண்ட காலமாகத் திரைப்படங்களை டி.ஆர்.சுந்தரம் அவர்கள் தயாரித்து வந்தபோதும், 1960களில்தான் சக கலைஞர்கள் ஓய்வு நேரங்களில் நாற்காலிகளில் அமரலாம் என்ற நிலை அமலுக்கு வந்தது.

அந்தளவுக்குக் கட்டுப்பாடுகள் நிறைந்த நிறுவனத்திலிருந்து, ‘சந்தனத்தேவன்’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், உடன் நடித்த நடிகை பொள்ளாச்சி ஞானத்தைக் கடத்திக் கொண்டு போனவர் நடிகர் எம்.ஆர்.ராதா. பொள்ளாச்சியிலேயே இருவரும் இணைந்து வாழ்ந்ததாகவும் அக்காலப் பத்திரிகைகள் தகவல்களைக் கடத்தின. அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பி.எஸ்.ஞானம், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் படங்களில் மீண்டும் நடிக்க முடிந்தது.

ஆனால், எம்.ஆர்.ராதா எவ்வளவு புகழ் வாய்ந்த நடிகராகத் தமிழ்த் திரையுலகில் கோலோச்சியபோதும், அவரால் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்குள் மட்டும் நுழையவே முடியவில்லை என்பதும் உண்மை. பி.எஸ். ஞானத்துக்குப் பிறகும் பல மனைவியர், துணைவியருடன் ராதாவால் குடும்பம் நடத்த முடிந்தது என்பதுவும் வெளிப்படை. மறைந்த எழுத்தாளர் விந்தன் இது குறித்து மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்.

எத்தனை யுகமானாலும் ஏழைகள் படும் பாடு ஒரே பாடுதான்…

1862 ஆம் ஆண்டு விக்டர் ஹியூகோ எழுதிய ஃபிரெஞ்சு நாவல் ‘Les Misrables’, தமிழில் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பில் பத்திரிகைகளில் வெளியானது. 1950 ஆம் ஆண்டு ‘ஏழை படும் பாடு’ என்ற பெயரில் தமிழில் திரைப்படமாகவும் வெளியானது. பிரான்ஸ் மக்கள் வறுமையில் படுகின்ற துயரத்தையும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், காவல் துறையும் அவர்களை ஒருங்கே வதைப்பதையும் இந்நாவல் மிக விரிவாகப் பேசியது. சிறைக்குச் சென்று திரும்பும் ஒரு கைதியின் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியானதுதான்.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது பெரும்பாலும் இல்லை என்பதை மிக எளிமையாகச் சொல்லிச் செல்லும் கதை. திரைப்படமும் மக்களின் துயரை, வறுமையை, பசி, பட்டினி, பஞ்சம் போன்றவற்றையும் பணம் படைத்த சீமான்கள் ஏழை எளிய மக்களை எவ்விதமாக நடத்துகிறார்கள் என்பதையும் மக்களிடம் எளிதாகக் கடத்தியது. வயிற்றுப்பிள்ளையோடு தன்னைக் கைவிட்டுப் போன வசதி படைத்தவனின் குழந்தையை வளர்க்க இயலாமல் பாவப்பட்ட பெண் ஒருத்தி, மாதம்தோறும் பணம் தருவதாகச் சொல்லி ஒரு தம்பதியரிடம் தன் குழந்தையை விட்டு விட்டு வேறு ஊருக்கு வேலைக்குச் செல்கிறாள். ஆனால், குழந்தையை நன்கு வளர்ப்பதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட தம்பதியோ, அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தையை தங்கள் வீட்டு வேலைக்காரக் குழந்தையாகவே வைத்திருக்கிறார்கள்.

தங்கள் வீட்டின் அத்தனை வேலைகளையும் அந்தக் குழந்தையின் மீது ஏவுகிறார்கள். அத்தோடு மேலும் மேலும் பொருளாசை கொண்டு வாரந்தோறும் கூடுதலாகப் பணம் வேண்டுமெனக் கேட்டு அந்தத் தாய்க்கும் கடிதம் எழுதுகிறார்கள். அந்தப் பெண் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்து அனுப்பும் பணம், உடை போன்ற அனைத்தையும் தங்கள் சொந்தக் குழந்தையை வளர்ப்பதற்காகச் செலவிடுகிறார்கள்.

வளர்ப்புக் குழந்தைக்குக் கொடுக்கும் உணவிலும் கூட பாரபட்சம் காண்பிக்கும் தம்பதியராக நடித்துப் படம் பார்க்கும் அனைவரின் வெறுப்பையும் ஒருசேர சம்பாதிப்பவர்களாக காளி.என்.ரத்தினம், பி.எஸ்.ஞானம் இருவரும் நடித்திருப்பார்கள். குழந்தைகள் என்றால் எல்லோரும் குழந்தைகள்தான். அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தையின் மீது அதீதமானதொரு வெறுப்பைக் கக்குவது என்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. இவ்வளவு வெறுப்பு ஒருவர் மீது ஏற்படும் என்றால், அது அவரது நடிப்புக்குக் கிடைக்கின்ற மாபெரும் அங்கீகாரம் அல்லாமல் வேறென்ன?

எனக்குத் தெரிந்து பி.எஸ்.ஞானம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே, அவர் மீது கடுமையான வெறுப்பினை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கான நடிப்பு என்றால், இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை மிஞ்சுவதற்கு வேறு ஓர் வேடம் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு தன் நடிப்பின் மூலம் வெறுப்பை விதைத்துச் சாதித்துக் காண்பித்திருக்கிறார் என்றும் சொல்லலாம். அத்தகைய ஒரு கொடூரம் நிறைந்ததோர் வேடம். சமூக ஏற்றத்தாழ்வுகள் சக மனிதனை எவ்வாறு சல்லித்தனம் மிக்கவனாக மாற்றும் என்பதற்கும் இத்தகைய கதைகள் மிகச் சிறந்த உதாரணம். நாடுகள் என்ற பேதமின்றி வறுமை அனைவரையும் அயோக்கியர்களாக்கும்.

பூங்கோதையின் அத்தையா? குமாரதேவனின் தாயா?!

கணவனையும் பறி கொடுத்து, பதினைந்து வயது மகன் குமார வீரன் வீட்டை விட்டுக் காணாமல் போன துயரம் ஒருபுறம் இருந்தாலும், தன் தம்பியின் வீட்டோடு தங்கியிருந்து தாயில்லாப் பெண்ணான தம்பியின் மகள் பூங்கோதை (பி.பானுமதி) யைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுக்கும் பொறுப்பான, அன்பே வடிவான அத்தையாக பி.எஸ்.ஞானம். வழக்கமாக, வில்லத்தனம் நிரம்பிய கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் பார்த்துப் பழகிய மனங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு பாத்திரம். அத்துடன், தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக வெளியூர் செல்லும் தன் தம்பியான சொக்கேச முதலியாரிடம், (D.பாலசுப்பிரமணியம்) ‘தன் மகன் குமாரதேவன் இருந்திருந்தால் பூங்கோதையை என் மருமகளாக்கிக் கொண்டிருப்பேனே… இப்படியாகிப் போச்சே…’ என்று கண் கலங்கிக் குரல் உடைந்து அழும்போதும் ரசிகர்களாகிய நம்மையும் கலங்க வைத்துவிடுவார்.

அப்துல் ரஹீம் (எம்.ஜி.ஆர்.) குடும்ப நண்பர் என்றபோதும், தங்கள் வீட்டுப் பெண் பூங்கோதையுடன் படுக்கையறையில் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஒரு அத்தையாக அவர் பதறித் துடிக்கும்போது, நாயகி பானுமதி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நாமும் சிரிப்போம். அட்டகாசமான ஒரு நகைச்சுவைக் காட்சி அது. அதேபோலவே, மலைக்கள்ளன் மிகப் பாதுகாப்பாக ஆண் உடையில் பூங்கோதையை இரவு நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போதும், அவர் ஆண் வேடத்தில் தன் அத்தையை ஆரத் தழுவிக்கொள்ளும்போதும் தன்னை அந்த ‘ஆணின்’ பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக அவர் பி.எஸ்.ஞானம் செய்யும் பிரயத்தனங்கள் அனைத்துமே மெல்லிய புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவை ரகம்தாம்…!
‘மலைக்கள்ளன்’ எம்.ஜி.ஆரின் மாஸ்டர் பீஸ் படம் என்றாலும் மிகையில்லை. ஆனால், டைட்டில் கார்டில் முதலில் இடம் பெறுபவர் வசனகர்த்தா மு.கருணாநிதியின் பெயர்தான். வசனத்துக்கு அந்த அளவுக்கு மரியாதை இருந்த காலகட்டம் அது.

பாசமே உருக் கொண்ட அன்னையாகவும் நடித்தவர்

‘சபாஷ் மீனா’ படத்திலோ நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ஊதாரித்தனமாகச் செலவு செய்வதும், சினிமா, டிராமா என்று தந்தையின் சம்பாத்தியத்தை வாரி விட்டுக்கொண்டிருக்கும் மகன் (சிவாஜிகணேசன்) அவனை திருத்துவதற்காக, திருச்சியிலிருந்து சென்னைக்கு நண்பரின் நிறுவனத்துக்கு வேலைக்கு அனுப்பும் தந்தை (D.பாலசுப்பிரமணியம்), மகனைப் பிரிய வேண்டுமே என்று எண்ணிக் கலங்கி, பீரோவிலிருந்து கையில் கிடைக்கும் பணத்தை அள்ளி டிபன் கேரியரில் திணித்து, சாப்பிடுவதற்குத் தயிர் சோறும், பச்சை மிளகாயும் வைத்திருப்பதாகப் பொய்யை அளந்துவிடும் அன்பான அம்மாவாகக் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் வஞ்சகமில்லாத நடிப்பை வாரி வழங்கியிருப்பார் பி.எஸ்.ஞானம்.

‘மரகதம்’ படத்திலோ மிகப்பெரிய ஜமீன் குடும்பத்துப் பணிப்பெண்களில் ஒருவராக நடித்திருப்பார். கடலில் கரை ஒதுங்கிய அலமுவை (பத்மினி) ஜமீந்தாரிணி கற்பகவல்லி (சந்தியா) கண்டெடுத்து சொந்த மகள் போல் பராமரித்து வளர்ப்பார். மற்றொரு பணிப்பெண்ணான டி.பி.முத்துலட்சுமி, அலமுவுக்குத் தலை அலங்காரம் செய்து கொண்டிருக்கும்போது பி.எஸ்.ஞானம் அங்கு வந்து, இந்தப் பெண் யாரென்று அலமுவைப் பார்த்து விசாரிப்பார். அதே நேரம் தான் இளம் வயதில் அவளை விட அழகாக இருந்ததாகவும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு போகும்போது, பத்மினியும், முத்துலட்சுமியும் தங்களுக்குள்ளாகவே சிரித்துக் கொள்வார்கள். படம் பார்க்கும் நம்மையும் அந்தப் புன்னகை சற்று நேரம் தொற்றிக் கொள்ளும்.

குடும்பத்துக்குள் ஊடுருவும் வில்லத்தனம் மிக்க பெண்கள்

‘பாசமலர்’ போன்ற அண்ணன்- தங்கை பாசத்தை முதன்மைப்படுத்தும் படங்களிலும் தான் வளர்த்த மருமகனுக்கு வாய்த்த மனைவி வசதியானவள், சொத்து, சுகம் என மதிப்பு மிக்க குடும்பத்திலிருந்து வந்தவள் என்றாலும், பொதுவாகக் குடும்பங்களுக்குள் இருக்கும் மிக நெருங்கிய உறவுப் பெண்களுக்குள் ஏதேனும் ஒருவகையில் பிடித்தம் இல்லாமலோ, அன்பு வெளிப்பாட்டிலோ குறைபாடுகள் இருப்பது இயல்புதான். மாமியார் – மருமகள், நாத்தனார் – அண்ணி, இல்லையேல் அத்தை, சித்தி, பெரியம்மா போன்ற உறவுகளும் ஒரு காலத்தில் நம்முடனே நம் குடும்பங்களில் ஒருவராக இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோருமே அன்பைப் பொழிபவர்களாக மட்டுமே இருந்துவிடுவதில்லை. குணக்கேடான பெண்களும், சிறு சிறு பிரச்னைகளைக் கூட ஊதிப் பெருக்கி விடுபவர்களாகவும், ஒருவிதத்தில், ‘ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி பூதாகரப்படுத்துபவர்களாகவும் அவர்களில் பலர் இருந்ததுண்டு. இம்மாதிரியான பெண்களால், குடும்பத்தில் இருக்கும் பிற பெண்களின் நிலை என்னவாகும் என்பதை நம் குடும்பங்களிலேயே நாம் நேரடியாகக் கண்டிருக்கிறோம். அவ்வாறு இல்லை எனில், சில திரைப்படங்களில் அம்மாதிரியான குணக்கேடு கொண்ட பெண்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். பல நடிகைகளை அந்த வரிசையில் வைக்கலாம். தங்கள் பிரமாதமான நடிப்பால் அவர்களைக் கண் முன் நிறுத்தியவர்களாக எம்.எஸ்.

சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி, சி.டி.ராஜகாந்தம், பி.எஸ்.ஞானம், எம்.எஸ்.எஸ். பாக்கியம் எனப் பல நடிகையரையும் இவ்வகைமையில் குறிப்பிடலாம். அதற்கு அடுத்தடுத்த தலைமுறையிலும் கூட பல நடிகையர் அவ்வாறு திரையில் ஜொலித்திருக்கிறார்கள். அப்படித்தான் ’பாசமலர்’ படத்திலும் ஜெமினி கணேசனின் அததையாக நடித்து சாவித்திரிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, படம் பார்க்க வந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் ரசிகைகளான ஒட்டுமொத்தப் பெண்களின் வயிற்றெரிச்சலையும் ஒரேயடியாகக் கொட்டிக்கொண்டார் பி.எஸ்.ஞானம்.

1960ல் வெளியான ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் அப்பாவியான, ஒருவிதத்தில் ஏமாளி அம்மாவாகவும் நடித்திருப்பார் ஞானம். எம்.ஆர்.ராதா, சந்திரபாபு இருவருக்கும் தாயாராகவும் நடித்திருந்தார் என்பது விசேஷம். பி.எஸ்.ஞானம் மிக இளம் வயதில் நடிக்கத் துவங்கியவர்; தன்னைக் காட்டிலும் மூத்த நடிகர்களுக்கெல்லாம் அம்மாவாக, அக்காவாக நடித்தவர்.
மிக இளம் வயதில் பெயரையும் புகழையும் பெற்றதைப் போலவே, மிக இளம் வயதிலேயே உயிரையும் துறந்தவர்.

மரணம் எல்லோருக்கும் வாய்ப்பதுதான் என்றபோதும், நாடகத்தில் நடிப்பதற்காக காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மிகக் கொடூரமான சாலை விபத்தில் 41 வயதிலேயே மரணமுற்றார் என்பது பெரும் துயரம். இன்னும் பல காலம் நாடகங்கள், திரைப்படங்கள் என கலைத் துறையில் நீடித்து நிலைத்திருக்க வேண்டியவர் மிக இளம் வயதில் மறைந்தது திரையுலகை அதிர்ச்சி கொள்ள வைத்தது. அவர் நடித்த படங்களின் வாயிலாக, கதாபாத்திரங்களின் வழியாக என்றென்றும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து வாழ்கிறார். அவருடைய பெரும்பாலான படங்கள் இப்போதும் பார்க்கக் கிடைக்கின்றன. அந்தப் படங்களின் வாயிலாக நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பார் பி.எஸ்.ஞானம்.

பி.எஸ்.ஞானம் நடித்த திரைப்படங்கள்

1.மைனர் ராஜாமணி, 2. தாயுமானவர், 3. பிரகலாதா, 4. மாணிக்கவாசகர், 5.ராஜசேகரன், 6. பம்பாய் மெயில், 7.சந்தனத்தேவன், 8. நவீன விக்கிரமாதித்தன், 9. காளமேகம், 10. சதி முரளி, 11.தயாளன், 12. கிருஷ்ணகுமார், 13.கிருஷ்ணப் பிடாரன், 14. பிருத்விராஜன், 15. திவான் பகதூர், 16. ஸ்ரீ ஆண்டாள், 17. மாரியம்மன், 18. பிழைக்கும் வழி, 19. கல்யாணி, 20. ஏழை படும் பாடு, 21. பொன்னி, 22. மலைக்கள்ளன், 23. மாங்கல்யம், 24. கதாநாயகி, 25. நீதிபதி, 26. கோமதியின் காதலன், 27.வள்ளியின் செல்வன், 28. முல்லை வனம், 29. பெண்ணின் பெருமை. 30.ரங்கூன் ராதா, 31. யார் பையன்?, 32. இல்லறமே நல்லறம், 33. சபாஷ் மீனா, 34. மரகதம், 35. தலை கொடுத்தான் தம்பி, 36. கவலை இல்லாத மனிதன், 37.சங்கிலித்தேவன், 38.கானல் நீர், 39. பாசமலர், 40. கொஞ்சும் சலங்கை, 41. எதையும் தாங்கும் இதயம்.

தொகுப்பு: ஸ்டில்ஸ் ஞானம்

 

Tags : B. S. Wisdom ,Saffron ,Kathalavai ,Achi' Manorama ,
× RELATED நம்பிக்கை இருந்தால் மலையை நகர்த்தலாம்!