×

ஒரு தேர்வின் முடிவு வாழ்க்கையை தீர்மானிக்குமா?

நன்றி குங்குமம் தோழி

சமீபமாக இந்தியா முழுவதிலும் நீட் போட்டித் தேர்வினால் மாணவர்கள் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமூகத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்வு என்பது அறிவை சோதிக்கும் ஒரு கருவிதான். ஆனால், அதுவே மாணவர்களின் வாழ்வை முடக்கும் கடுமையான சுமையாக மாறி வருகிறது. தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களிடையே ஏற்படும் பதற்றம், மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றை கையாளுதல், மாணவர்களின் நலனில் பெற்றோர்களின் பங்கு ஆகியவை குறித்து குழந்தை மற்றும் இளம்பருவ மனநலம் ஆலோசகர், உளவியலாளர் மற்றும் பெற்றோர் – குழந்தை உறவுமுறை நிபுணரான டாக்டர் மாலதி கார்த்திபன் விளக்கம் அளிக்கிறார்.

இது ஆரோக்கியமான போட்டியா?

“போட்டித் தேர்வு என்பதிலேயே இது ஒரு போட்டி என்பது உறுதியாகிறது. பொதுவாக ஆரோக்கியமான போட்டியை நாம் ஊக்குவிப்போம். போட்டித் தேர்வுகளை பொறுத்தவரையில் படிப்பில் சேருவதற்கான இருக்கைகள் குறைவுதான். ஆனால், ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தனை பேருடன் போட்டியிடும் போது தனக்கு சீட் கிடைத்துவிடுமா என்கிற அச்சம் மாணவர்களிடையே அதிகரிக்கிறது. போட்டித்தேர்வை தேர்ந்தெடுக்கும் போதே இதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடுகின்றனர். இதைத்தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று மாணவர்களுக்கு புலனாவதில்லை. பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவே சிலர் படிக்கிறார்கள்.

என்ன கற்றுக்கொள்கிறோம், எவ்வளவு அறிவை பெறுகிறோம் என்பதை விடவும் ஃபியர் ஆஃப் ஃபெயிலியர் எனும் மனநிலையே மாணவர்களுக்கு அதிகமாக உள்ளது. அதிகபட்ச மதிப்பெண் பெற விரும்புகின்ற மற்றும் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே இலக்காக கொண்ட இரண்டு விதமான மாணவர்களுக்குமே இந்த மனநிலைதான் இருக்கும். இது சாதாரண தேர்வு பதற்றம் என்று சொல்லிவிடமுடியாது. வகுப்புத் தேர்வு, ஆண்டு தேர்வு போன்ற சமயங்களில் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன் சிறிய அழுத்தம் இருக்கலாம். அது பாதிப்பில்லாதது. பின்பு இயல்புநிலைக்கு வந்துவிடுவோம். ஆனால், போட்டித் தேர்வு பதற்றம் என்பது அப்படியல்ல.

சில மாணவர்களுக்கு இது ‘நீடித்த மன அழுத்தமாக’ (Chronic Psychological Distress) மாறுகிறது. வெளி உலகில் மற்றவர்களை பார்க்கும்போது எல்லோரும் ஏதோவொன்றை செய்து கொண்டிருக்கிறார்கள், நான் எல்லா விஷயங்களையும் இழக்கிறேன் என்கிற பயம் இருக்கும். இளம்பருவத்திற்கான பர்ன்-அவுட் சிண்ட்ரோம் என்பதும் மாணவர்களுக்கு வந்துபோகும். இதை பெற்றோர்களுக்கு விளக்கி புரியவைப்பதே கடினம்.

‘‘இது படிக்கிற வயசுதானே படிக்கட்டும்… அவனுக்கு ஏன் ஓய்வு’’ என்றெல்லாம் கேட்பார்கள். தேர்வு என்பதையெல்லாம் தாண்டி அவர்கள் இளம்பருவத்தினர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘‘நீ இதுதான் படிக்க வேண்டும்’’ என பெற்றோர்கள் சொல்வதும், ‘‘நான் சி.ஏ படிக்க நினைச்சேன். ஆனால், என்னை டாக்டர் படிக்க சொல்லுறாங்க’’ என மாணவர்கள் புலம்புவதும் என தனக்கான ஆசையை துறந்து பெற்றோர்களுக்காக படிக்கத் தொடங்கும் போதே மன அழுத்தம் தொடங்குகிறது.

பெற்றோரின் எதிர்பார்ப்பும் அழுத்தமும்…

ஒரு ஆலோசகராக பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் பேசி இருவரின் விருப்பத்தையும் கேட்டு வழிகாட்டுதல் செய்வோம். ஒருவேளை குழந்தைக்கு மட்டும் கேரியர் கைடன்ஸ் கொடுத்து அனுப்பிவிட்டால், வீட்டிற்கு சென்றதும் பெற்றோர்கள் எப்படியாவது மனதை மாற்றி தங்களுக்கு விருப்பமானதையே படிக்க சொல்லிவிடுவார்கள்.

பெரும்பாலான நேரங்களில் ஆலோசனையின் போது பிள்ளைகள் விரும்புகின்ற படிப்புக்கு பெற்றோர்கள் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகமாட்டார்கள். சில பெற்றோர் இந்தப் படிப்பினால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை குறித்தே முடிவெடுக்கின்றனர். தாங்கள் விரும்பிய தங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போன ஒரு கனவினை பிள்ளைகளின் வழியே செய்து பார்க்கவும் முயற்சிக்கிறார்கள். இதையே பதிலீடு மனநிறைவு எனக் குறிப்பிடுகிறோம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு பிள்ளைகளிடையே அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள், தாங்கள் நினைப்பதை முதலில் சொல்லுமிடம் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் பேசும்போது, “உனக்கு ஒன்னும் தெரியாது, நாங்க சொல்லுறதை கேளு” என்று சொல்லி பேசுவதற்கான இடமளிக்க தவறிவிடுகிறார்கள். முதலில் பிள்ளைகளிடம் கலந்துரையாடுவதும் வெளிப்படையாக பேசவிடுவதும்தான் அவர்களை குணப்படுத்தும். பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி மதிப்பெண்கள் வாங்காதபோதும், படிப்புக்காக சில முயற்சிகளை செய்யாதபோதும், கட்டளையாக சொன்னால்தான் உட்கார்ந்து படிக்கிறார்கள் என்று தினமும் “இத்தனை மணி நேரம் இதை படி” என்பது போன்ற கட்டளைகளை சொல்ல தொடங்குகின்றனர். இது என்னுடைய வாழ்க்கை, நான்தான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து தாமாகவே படிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்து வரும் அழுத்தம் குறைவாக இருக்கும்.

ஊக்குவித்தல் மற்றும் வழிகாட்டுதல்…

மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும்போதே, “நம்ம குழந்தை நல்லா படிக்கிறாங்க, நல்ல மார்க் வாங்கிடுவாங்க” என்று நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்பார்த்ததை விட சில மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும். “நல்ல முயற்சி செய்திருக்கிறாய், அடுத்த முறை மேலும் முயற்சிக்க வேண்டும்” என நேர்மறையான வார்த்தைகளை சொல்லி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். “நீ படிக்கவே இல்லை, தேர்வினை சரியாக எழுதவில்லை” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தால், மாணவர்களின் மனதில் பதற்றம், பயம் உணர்வுகள்தான் அதிகரிக்கும்.

படிப்பதில் இருந்து ஒருநாள் ஓய்வு எடுத்தால் கூட, “ஒருநாள் வேஸ்ட் ஆகிடுச்சே” என்று சொல்லிக்காட்டி பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது அவசியம். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் போது, “உனக்கு இவ்ளோ செலவு பண்ணிருக்கேன், என்ன மார்க் வாங்கிருக்க போறியோ” என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்காமல், குழந்தைகளையும் அவர்களின் மதிப்பெண்களையும் தனியாக பார்ப்பது மிகவும் அவசியம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் வேளையில், இந்த இலக்கை எட்ட முடியவில்லையெனில் பிளான் பி, சி, டி என அடுத்தடுத்த திட்டங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுவொன்றுதான் வாழ்க்கை என்று இருந்துவிடக்கூடாது. பெரும்பாலான பெற்றோர்கள் டாக்டர், என்ஜினியர் போன்ற படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கும் பல துறை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு அதிகப்படியான பரிட்சயம் இருப்பதில்லை. ஒரு ஆலோசகராக இதுகுறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கடமையாக செய்து வருகிறோம்.

தற்போது பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. வரும் காலங்களில் புதுப்புது துறைகளும் வேலை வாய்ப்புகளும் வந்துகொண்டேயிருக்கும். மருத்துவரும், பொறியாளரும் மிகவும் முக்கியமான பொறுப்புகள்தான். எனினும் அவை மட்டும்தான் கவுரவம் என்று நினைக்கக்கூடாது. எல்லா பணிகளும் மதிப்புடையவைதான். தேர்வு முடிவுகளுக்கு பின் மாணவர்களை கையாளும் விதமும் முக்கியமானது. உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் உங்கள் பிள்ளையின் மதிப்பெண்கள் குறித்து பேசும்போது, என்ன தரவரிசை, மதிப்பெண் என்றாலும் நீங்கள் அவர்களிடம் அதை எவ்வாறு தெரிவிக்கிறீர்கள் என்பது அவசியம். நம் பிள்ளைகளுக்கு நேராக அவர்களை குறித்து மற்றவர்களிடம் என்ன, எவ்வாறு பேசுகிறோம் என்பதும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம்.

தற்கொலை எண்ணமும் வழிகாட்டுதலும்!

தற்கொலை என்பது பெரும்பாலான நேரங்களில் திடீரென எடுக்கப்படும் முடிவல்ல, அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. மாணவர்களிடம் தென்படும் சில நடத்தை மாற்றங்களை பெற்றோர் கவனிக்க வேண்டும். ‘‘நான் ஒரு வேஸ்ட், இனிமேல் என்னைப் பார்க்க மாட்டீர்கள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். தனிமையை அதிகம் விரும்புவது, இருட்டறையிலேயே முடங்கி இருப்பது, சமூகத்திலிருந்து விலகியிருப்பது, தூக்கமின்மை அல்லது அதிகப்படியான தூக்கம், பசியின்மை, திடீர் கோபம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.

தங்கள் பொருட்களின் மீது ஈர்ப்பில்லாமல் இனிமேல் வேறு யாருக்காவது பயன்படட்டும் என்று நினைத்து ஒவ்வொன்றாக மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்க தொடங்குவார்கள். பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் இதுபோன்ற மாற்றங்களை நிச்சயம் அறிய முடியும். நிபந்தனையற்ற அன்பு, மாற்று திட்டங்கள், தொழில் வழிகாட்டுதல் போன்றவையே இதற்கான தீர்வாகவும் வழிகாட்டுதலாகவும் அமையலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயமாக மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். மாணவர்களின் அறிவுத்திறன், உணர்ச்சித்திறன் மற்றும் சமூகத் திறன்களை (IQ, EQ & SQ) மேம்படுத்த உதவ வேண்டும். கல்வி என்பது ஒரு முதலீடு அல்ல, அது ஒரு கற்றல் முறை. தோல்விகளில் இருந்து மீண்டு வரும் வலிமையை மாணவர்களுக்குக் கற்பிப்பதே ஒரு சிறந்த கல்வி முறையாக இருக்க முடியும். இன்று நீட் தேர்வு எனில் நாளை வேறொரு சவால் வரலாம். எனவே, தோல்வி அடைந்தால் “அடுத்தது என்ன?” என்ற நேர்மறையான சிந்தனையை மாணவர்களிடம் விதைப்போம்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

Tags : Kungumam Dozhi ,India ,
× RELATED சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயலி Bachatt App