×

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு

விழுப்புரம்: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கட்சியிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் விலகும் முடிவால் அதிமுக கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போர்க்கொடி தூக்கினார். தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்தை அமைப்புச் செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக பசுபதி என்பவரைப் புதிய மாவட்டச் செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அணி, எடப்பாடி பழனிசாமி தரப்பின் பசுபதி அணி என இரு பிரிவினராகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளம் ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த பசுபதியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் கட்சிப் பதவிகளை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததால், அவர்கள் தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர், எடப்பாடி பழனிசாமியிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகும் இந்த முடிவால், விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Sanmugham ,Adimuka ,Edappadi Palanisami ,Adimuga ,
× RELATED கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி;...