×

நாட்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகள் கரையான்களால் அரிக்கப்பட்டு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது – ராகுல் காந்தி

டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தடியடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடியடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பதோடு, பிரதமர் பதவியில் இருந்து விலகவும் மோடியை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் நாட்டின் இளைஞர்களை இப்படி நடத்த கூடாது. நம் நாட்டின் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் இல்லை; அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகள் என்ற ஒரே ஒரு வழி மட்டுமே திறந்திருந்தது, அதுவும் இப்போது சீர்குலைக்கப்பட்டுவிட்டது. எனவே இந்திய மாணவர்கள் கல்வி முறையைப் பற்றி மட்டுமல்ல, தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். அம்பானி மற்றும் அதானி ஆகியோரின் ஆதிக்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றியிருப்பது ஆகியவை தான் இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கவலைக்கு காரணம். நாட்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகள் கரையான்களால் அரிக்கப்பட்டு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்றும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொடரும் நிலையில் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கையில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். அம்பானியின் திருமணத்திற்காக 1,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதை பார்த்தார்கள். இந்தியாவில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகிவிட்டது. இது அவர்களின் நியாயமான ஆதங்கம். எனவே தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றார்.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,NEET ,
× RELATED ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...