கோத்தகிரி, ஜூலை 20: கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி காட்சி முனைக்கு செல்லும் வழியில் பயணியர் நிழற்குடை அருகே தனியார் காட்டேஜ்களின் கழிவு பொருட்கள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கேத்தரின் நீர்வீழ்ச்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கேத்தரின் நீர்வீழ்ச்சியானது சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு குஞ்சப்பனை ஊராட்சி பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கோடைகாலம் மட்டுமின்றி, வார இறுதி நாட்கள், வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வனத்துறை மூலம் பாதுகாப்பு வேலிகள், நடைபாதை மற்றும் கழிப்பறை, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், அதை முறையாக பராமரிப்பு செய்யாததால் அவை அனைத்தும் பயனற்ற நிலையில், சேதமடைந்து உள்ளது. சுற்றுலா பயணிகள் சமவெளிப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை குப்பைத்தொட்டியில் போட குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அவற்றை தேயிலைத் தோட்டத்துக்குள் வீசி செல்லும் நிலை உள்ளது. கேத்தரின் நீர்வீழ்ச்சி காட்சி முனைக்கு செல்லும் வழியில் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணியர் நிழற்குடை அருகே தனியார் காட்டேஜ்களின் கழிவு பொருட்கள் கொட்டப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. காட்சி கோபுரம் மதுபிரியர்களின் உறைவிடமாக காணப்படுகிறது. குளிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆபத்தை அறியாமல் அதிக சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நடைபெறாத வண்ணம் காவல்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
