ஊட்டி,ஜூலை 20: ஊட்டி புதுமந்து அருகே கோழிப்பண்ணை பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஊட்டி நகரை சுற்றிலும் அடர்ந்த வனங்கள் உள்ளன. இந்த வனங்களில் இருந்து அவ்வப்போது சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நகருக்குள் நடமாடுவது வாடிக்கை. இவற்றை வனத்துறையினர் கண்காணித்து வனத்திற்குள் விரட்டுவார்கள். இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஊட்டி புதுமந்து அருகே கோழிப்பண்ணை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அடர்ந்த வனத்தை ஒட்டிய இந்த பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாலையோர குப்பைத்தொட்டி அருகே கரடி உலா வந்ததை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் குட்டிகளுடன் சுற்றி தெரியும் கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது. வேலைக்கு மற்றும் பள்ளிக்கு சென்று திரும்பும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் ஒற்றை கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்’’ என்றனர்.
