பந்தலூர்,ஜூலை20: பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபட்டு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பந்தலூர் அருகே தேவாலா அட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், ‘‘மனித வாழ்வு இயற்கையோடு ஒன்றிணைந்தது. நீர், நிலம், காற்று, ஆகாயம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் பாதுகாப்பே மனித சமூகத்தின் பாதுகாப்பாகும்.நீர்நிலைகளில் வீட்டு கழிவுகள், குப்பைகள் மற்றும் ரசாயனப் பொருட்கள் கலப்பதால் நீர் மாசடைந்து பல்வேறு நோய்கள் உருவாகின்றன.பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபட்டு சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, இயற்கைக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். மரங்களை வளர்த்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்’’ என்றார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் தரிசனதேவி,சாந்தி, தமிழ்ச்செல்வன், சித்ராதேவி, மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
