சாண எரிவாயு கழிவு தொழு உரத்துடன் பயன்பாடு எப்படி? வேளாண் அதிகாரிகள் விளக்கம்

 

மதுரை, ஜூலை 20: சாண எரிவாயு உரம் இடும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: உலர்ந்த சாண எரிவாயு உரத்தை விதைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக நிலத்தின் மேல் தூவலாம். உலராத சாண எரிவாயு உரத்தை பாசன நீருடன் நேரடியாக கலந்து பயிர்களுக்கு பாய்ச்சலாம். உலராத சாண எரிவாயு உரத்தை விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்வதால் முளைப்பு திறன் அதிகரித்து பூச்சிகளிலிருந்து பாதுகாக்கிறது. 2 ஆயிரம் சதுர மீட்டர் உள்ள மீன் பண்ணைக்கு நாள் ஒன்றுக்கு 15 முதல் 25 லிட்டர் உலராத உரத்தை உணவாக இடலாம். உரத்துடன் பிண்ணாக்கு அல்லது அரிசி தவிடு 2:1 விகிதத்தில் கலந்து மீன் உற்பத்தியை அதிகரிக்கலாம். பொதுவாக எல்லாவித பயிர்களுக்கும் சாண எரிவாயு எருவை இடலாம்.

* சாண எரிவாயு கழிவு எரு இடுவதால் ஏற்படும் நன்மைகள்: களைகள் முளைப்பதில்லை. மண்ணில் வேர்கள் எளிதில் ஊடுருவி செல்லும். வேர்களின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறன் அதிகரிக்கின்றது. மண்ணிற்கு போதுமான காற்றோட்டமும் மற்றும் வெப்பமும் கிடைக்கின்றது. மண் நீரை தக்க வைத்து கொள்ளும் திறன் அதிகரிக்கின்றது. கார அமிலத்தன்மை மாறுபாடு தவிர்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பிரதான எரிபொருளாக பயன்படுத்தப்படும் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க சாண எரிவாயு ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: