வீட்டின் கதவை உடைத்து 13 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

 

பெரம்பூர், ஜூலை 28: பெரம்பூரில் வீட்டின் கதவை உடைத்து 13 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வியாசர்பாடி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (70). இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் ஊரப்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், இவரது உறவினர் பாலமுருகன் என்பவர், இவரது வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் இதுகுறித்து பாலமுருகனுக்கு செல்போனில் தகவல் அளித்தார். அவர் விரைந்து வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 13 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து, கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Related Stories: