சேந்தமங்கலம், ஜூலை 20: புதுச்சத்திரம் அருகே பூஜை பொருட்கள் கடையின் பூட்டை உடைத்து, பித்தளை சாமான்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (32). இவர் புதுச்சத்திரம் அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியில் உள்ள செட்டிகுமாரசாமி கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். கோயில் வளாகத்திலேயே தங்கி, அங்குள்ள கடையில் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், கோயில் வேலைகளை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பூஜைக்கான சொம்புகள் குடங்கள், பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசில் நடராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
