நாமகிரிப்பேட்டை, ஜூலை 17: வெண்ணந்தூர் ஒன்றியம், அனந்தகவுண்டம்பாளையம் ஊராட்சியில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி நினைவு நிழற்கூடம், 100 அடி உயரம் கொண்ட திமுக கொடி கம்பம், கிரிக்கெட் மற்றும் கபடி ஸ்டேடியம் உள்ளிட்ட ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இலவச சேவைகளை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராஜேஸ்குமார் எம்பி பேசுகையில், `திமுகவின் மூத்த முன்னோடி துரைசாமி, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் திறம்பட செயல்பட்டவர். தனது சொந்த நிதியில் அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற பல உதவிகளை செய்துள்ளார். இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து, மக்களின் பாராட்டை பெற்றவர்,’ என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, ஜெகநாதன் மற்றும் மாயவன், மணிமாறன், நிர்வாகிகள் சக்தி, சதாசிவம், தருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
