வேலூர், ஜூலை 20:எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் வாழை, தக்காளி, கத்தரி, மஞ்சள் உட்பட தோடக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2026 காரிப் பருவத்தில், வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட தோடக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். காரிப் பருவத்தில் தக்காளி மற்றும் கத்தரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 31ம் தேதி ஆகும். வாழை மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-இணையதளத்தில் சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு (https://pmfbv.gov.in/) உள்ள விவசாயிகள் கார்னர் வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே இத்திட்டத்தின்கீழ் பதிவுசெய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம், குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம். மேலும் விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் வேலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்கா மற்றும் பயிர்களின் படி பதவி செய்ய வேண்டும்.
அதாவது அணைக்கட்டு வட்டாரத்துக்கு உட்பட்ட ஒடுகத்தூர், அகரம் பிர்காவுக்கு வாழையும், கணியம்பாடி வட்டாரத்துக்கு உட்பட்ட கணியம்பாடி, பென்னாத்தூர் பிர்காவுக்கும் வாழையும், பேர்ணாம்பட்டு வட்டாரத்துக்கு உட்பட்ட பேர்ணாம்பட்டு பிர்காவில் தக்காளியும், அணைக்கட்டு வட்டாரத்துக்கு உட்பட்ட அகரம் பிர்காவில் தக்காளியும், குடியாத்தம் வட்டாரத்துக்கு உட்பட்ட வளத்தூர் பிர்காவில் கத்தரிக்காய், கணியம்பாடி வட்டாரத்துக்கு உட்பட்ட கணியம்பாடி, பென்னாத்தூர் பிர்காவில் மஞ்சள் பயிரும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
