குடியாத்தம், ஜூலை 20 : குடியாத்தம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பெங்களூரு சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் பணி நிமித்தமாக பெங்களூரு சென்றிருந்தார். வீடு பூட்டியிருந்த நிலையில், நேற்று யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று ஊர் திரும்பிய மணிவண்ணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் சேகரித்தனர். அதேபோல், அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகல் நேரத்தில் வீடுகள் பூட்டியிருக்கும் நேரத்தை பயன்படுத்தி திருட்டு நடப்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். திருடர்களை விரைவில் கைது செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
