வேலூர், ஜூலை 16: காட்பாடி அருகே திருமணமான 21 நாளில் நகை, பணத்துடன் புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்ததாக எஸ்பியிடம் கணவர் பரபரப்பு புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்பி சிவராமனிடம் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது அண்ணன் சென்னையில் வசித்து வருகின்றார். அவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். அவருடன் சென்னை மதுரவாயிலை சேர்ந்த ஒருவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். எனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அண்ணனுடன் வேலை செய்பவர் எனது மனைவியின் தங்கை ஒருவர் இருக்கிறார். அவருக்கு தாய், தந்தை இல்லாததால் எங்கள் பராமரிப்பில் உள்ளார். உங்களுக்கு வேண்டுமென்றால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். அதேபோல் பெயிண்டரின் தாயும் திருமணம் திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்தார்.
எனவே நாங்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொடுத்து சோளிங்கர் முருகர் கோயிலில் கடந்த மாதம் 7ம் தேதி திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆகி சில நாட்கள் மட்டுமே எனது மனைவி என்னுடன் இருந்தார். திடீரென கடந்த 28ம் தேதி நகை, பணத்தை எடுத்துக்கொண்டு யாருக்கும் சொல்லாமல் எனது மனைவி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து விசாரித்தபோது, எனக்கு திருமணம் செய்து வைத்த பெயிண்டருக்கும், எனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதனால் நகை, பணத்துடன் அக்கா கணவருடன் தப்பிச் சென்றுள்ளார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
