ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சியில் 9 வார்டுகளில் சுமார் 7 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி என அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், பிரசித்து பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்ந பவானி அம்மன் கோயிலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பல்லாயிருக்கணக்கானோர் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகே உள்ள நெல்வாய் கிராம மருத்துவமனை சாலையில் ஏராளமானோர் சாலையை ஆக்கிரமித்து பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர் என நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
அப்போது, கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்களை அதிகாரிகள் சமாதனப்படுத்தி கடைகளை அகற்றினர். இதனை தொடர்ந்து, அந்தப் பகுதியில் மீண்டும் சாலையை ஆக்கிரத்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல் எதிரொலி
பெரியபாளையத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பேருந்து, வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆடி மாத முதல் நாள் வெள்ளிக் கிழமையிலேயே மாதம் பிறந்ததால் பெரியபாளையத்தில் அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு வந்தது. அனைவரும் 4 முதல் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வழக்கமான போக்குரவத்து என இரண்டு சேர்ந்து நேற்று முன்தினம் பயங்கர நெரிசல் ஏற்பட்டு அப்பகுதி மக்களும், பக்தர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இதன் எதிரொலியாக இன்று (நேற்று) சாலையோர கடைகள் அகற்றப்பட்டது. இதனால், மக்களும், பக்தர்களும் சிரமின்றி கோயிலுக்கும், அவர்களின் சொந்த வேலைக்காரணமாகவும் வந்து செல்ல சவுகரியமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறினர்.
