தேவதானப்பட்டி, ஜூலை 18:தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுதா ஷர்மிளா(37). இவர் சில்வார்பட்டி தியேட்டர் ஸ்டாப் அருகே பைப்புகள் மற்றும் ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று, கடைக்கு அருகே உள்ளவர்கள், சுதா ஷர்மிளாவிற்கு போன் செய்து, உங்களது கடையில் தீ பிடித்துள்ளது என கூறியுள்ளனர்.
உடனே அவர் அங்கு வந்து பார்த்த போது கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்திருந்தது. இது குறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
