தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் வராத ரூ.82.10 லட்சம், அதிகாரிகள் செல்போன்கள் பறிமுதல்

 

சென்னை: தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களிடம் அதிகாரிகள் அதிகளவில் லஞ்ச பணம் பெறுவதாக புகார்கள் வந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை (பொறுப்பு) அதிகாரியான ஐஜி மகேஸ்வரி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தனித்தனி குழுக்காக பிரிந்து அதிகளவில் புகார்கள் வந்த வட்டாட்சியர் அலுவலகங்களை குறிவைத்து வார இறுதி நாளான நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 35 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் எழும்பூர் தாலுகா அலுவலகத்தில் 11 ஆயிரம், சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.6,67,000, மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.42,900, பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.52,680 ஆயிரம் என டிஎஸ்பி கந்தசாமி தலைமையில் 4 லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.7 லட்சத்து 73 ஆயிரத்து 580 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சோதனையில் ரூ.39,950 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் சோதனையில் ரூ.36,750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அறை மற்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளின் உடைமைகள் மற்றும் ஜிபே மூலம் பொதுமக்களிடம் லஞ்சப்பணம் பெறப்பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அதைப்போன்று செங்கல்பட்டு, வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 580 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சீர்காழி, மேல்மலையனூர், புதுக்கோட்டை, தேனி உள்பட தமிழகம் முழுவதும் அதிகளவில் புகார்கள் வந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்க பணம் ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 250, கூகுள்பே மூலம் ரூ.68 லட்சத்து 32 ஆயிரத்து 582 என மொத்தம் ரூ.82 லட்சத்து 10 ஆயிரத்து 832 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: