* சடலத்துடன் மீண்டும் போராட்டம்: உடனே அரசு வேலை வழங்கிய அதிகாரிகள்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறைக்குள் அடித்துக்கொலை செய்யப்பட்ட வியாபாரி சபரிவர்மனின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற அமைச்சர்கள் ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்குவதாக கூறி உடலை பெற்று கொள்ளும்படி பஞ்சாயத்து செய்து உள்ளனர். ஆனால் அமைச்சர்களின் வாக்குறுதிகளை ஏற்க மறுத்த உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு சிடியை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
இதை கொடுத்ததால், சபரிவர்மனின் உடலை 5 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். மீண்டும் சடலத்துடன் போராட்டம் நடத்தியதால் உடனே அரசு வேலை வழங்கப்பட்டது. குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான சபரிவர்மன் (34) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கூறி தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9ம்தேதி கைது செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறையில் அவர் கடந்த 13ம்தேதி அதிகாலை அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிந்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் கைதிகள் 8 பேரை கைது செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்த காயங்களால் அவர் இறக்கவில்லை என்று கூறப்பட்டதால், பிரேத பரிசோதனையில் சந்தேகம் உள்ளதாக கூறி கடந்த 5 நாட்களாக சபரிவர்மன் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை வீடியோவை தங்களிடம் சி.டி.யாக ஒப்படைக்க வேண்டும் என்றனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், நேற்று மாலை வரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எந்த ஆறுதலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் ஈத்தங்காட்டில் உள்ள சபரிவர்மன் இல்லத்துக்கு சென்றனர். கலெக்டர் பிரதாப், எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் சென்று இருந்தனர். சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது அமைச்சர்கள் தரப்பில் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை, 2 சென்ட் நிலம் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனால் உடலை வாங்க வேண்டும் என்றும் கூறினர்.
ஆனால் சபரிவர்மனின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கான வீடியோ காட்சிகளை எங்களுக்கு தெரிந்த டாக்டர்களிடம் காண்பித்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம். அதன் பின்னரே உடலை வாங்குவது மற்றும் அரசின் நிவாரணம், அரசு வேலை தொடர்பாக முடிவு செய்வோம் என கூறினர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, நள்ளிரவில் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்த நிலையில் சபரி வர்மனின் குடும்பத்தாரிடம், பிரேத பரிசோதனைக்கான சி.டி., நீதிமன்ற அனுமதி பெற்று ஒப்படைக்கப்பட்டது. இதை அவர்கள், தங்களுக்கான டாக்டர் குழுவிடம் காண்பித்து உள்ளனர். இதில் பிரேத பரிசோதனை செய்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உடலை வாங்க சபரிவர்மனின் உறவினர்கள் நேற்று சம்மதம் தெரிவித்தனர். இதை கலெக்டர், எஸ்.பி.யிடம் தெரிவித்தனர்.
அதன்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் சபரிவர்மன் உடலை உறவினர்கள் பெற்றனர். பின்னர் அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஈத்தங்காடு சந்திப்பில் சென்ற போது அங்கு திரண்டு இருந்த உறவினர்கள் சிலர் சபரிவர்மன் உடல் இருந்த ஆம்புலன்சை மறித்து மறியல் போராட்டம் செய்தனர். மறியல் போராட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், விஸ்வ இந்து பரிஷத் காளியப்பன், பா.ஜ. அருள் சிவா, ராஜா மற்றும் பலரும் பங்கேற்றனர்.
தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் சார்பில் நேற்று முன்தினம் பேச்சு வார்த்தைக்கு வந்த அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார் ஆகியோர் ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை, 2 சென்ட் நிலம் உள்ளிட்டவை வழங்கப்படும். உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். அதன்படி ஒருநாள் அவகாசம் கேட்டு, தற்போது சபரிவர்மன் உடலை பெற்றுக் கொண்டோம். ஆனால் நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.
உடனடியாக அந்த நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அப்போது தான் உடலை அடக்கம் செய்வோம் என்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரணங்கள் வந்தால் உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறுதியாக தெரிவித்தனர்.
இதனால் போராட்டம் இரவு 8 மணி வரை நீடித்தது. இதையடுத்து, சபரிவர்மனின் மனைவியிடம், ரூ.10 லட்சம் காசோலை, வீட்டுமனை, அரசு வேலைக்கான உத்தரவு நகலை அதிகாரிகள் வழங்கினர். இதை உறுதி செய்த பின், ஆம்புலன்ஸ் முன் நடந்த மறியல் கைவிடப்பட்டது. பின்னர் சபரிவர்மனின் உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
* முதல்வர் இரங்கல் கூட சொல்ல மாட்டாரா? அமைச்சர்களிடம் உறவினர்கள் கேள்வி
சபரிவர்மனின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார் ஆகியோர் கூறியபோது, ‘‘மக்கள் எல்லாம் ஓட்டு போட்டு தானே விஜய் முதலமைச்சரா ஆனாரு. மக்கள் ஓட்டு போடாமல் இருந்தால் எப்படி முதலமைச்சர் ஆகி இருப்பாரு. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் ஒரு இரங்கல் செய்தியை கூட முதலமைச்சர் தெரிவிக்கவில்லையே. அவரு நேரில் வர வேண்டாம். ஒரு இரங்கல் அறிக்கை கொடுத்தாருனா, எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
அதை கூட செய்யவில்லையே’’ என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கீடு செய்த கலெக்டர் பிரதாப், ‘‘முதலமைச்சரின் பிரதிநிதியாக தான் அமைச்சர்கள், நாங்க எல்லாரும் வந்து இருக்கோம். அவரு சொல்லித்தான் வந்துள்ளோம்’’ என்றார்.
அமைச்சர் ஸ்ரீநாத், ‘‘கேபினட் கூட்டம் முடிந்ததும் என்னையும், ராஜேஷ்குமாரையும் அழைத்து, உடனடியாக நீங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திச்சு ஆறுதல் கூறுங்கள் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதனால் தான் நாங்களே உடனடியாக வந்தோம்’’ என்றனர். ஆனால் கடைசி வரை குடும்பத்தினர் சமாதானம் ஆகவில்லை. அரசு வேலை, ரூ.10 லட்சம் ஆணையை பெற மறுத்தனர்.
* ‘அரசு வேலையை உடனே கொடுங்க…’
சபரிவர்மனின் உறவினர்கள் கூறுகையில், ‘‘சபரிவர்மன் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக தான் கடந்த 5 நாட்களாக போராடினோம். சபரிவர்மனின் குடும்பம் தற்போது நிற்கதியில் உள்ளது. அவரது மனைவிக்கு உடனடியாக அரசு வேலை அறிவிக்கப்பட வேண்டும். விசாரணை தொடங்கி விட்டதால் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை’’ என்றனர்.
* 25 கைதிகளிடம் விசாரணை
சபரிவர்மன் கொலை தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், ஏடிஎஸ்பி கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நேற்று முன்தினம் நாகர்கோவில் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதாகி உள்ள 8 கைதிகள் தற்போது தனித்தனி அறையில் உள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
சுமார் 4 மணி நேரம் வரை விசாரணை நடந்துள்ளது. இதில் சபரிவர்மன் சிறைக்குள் வந்ததில் இருந்து அவர் உயிரிழந்தது வரை உள்ள சம்பவங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்களை தனிப்படை போலீசார் பதிவு செய்துள்ளனர். இது தவிரவழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள சிறை கைதிகளிடமும் விசாரணை நடந்துள்ளது. அந்த வகையில் 25 கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சிறைக்குள் தாக்குதல் நடந்த போது யார், யார் உடன் இருந்தனர் என்பது பற்றியும் விசாரித்து உள்ளனர்.
* ரகசியமாக திறக்கப்பட்ட கைதிகள் அறை
நாகர்கோவில் சிறைக்குள் விசாரணை கைதிகளுக்கான தனி பிளாக் உள்ளது. மாலை 5 மணிக்கு அறைக்குள் அனைவரும் சென்று விடுவார்கள். பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு தான் அறை திறக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் கைதிகள் அறை திறக்கப்படும் போதும், மூடப்படும் போதும் அதற்கான சாவியை யார் வாங்கி செல்கிறார்கள். எத்தனை மணி, எவ்வளவு நேரம் கழித்து ஒப்படைக்கப்பட்டது என்பது போன்ற விபரங்கள் பதிவேட்டில் இருக்க வேண்டும்.
ஆனால் சபரிவர்மன் கொலை நடந்ததாக கூறப்படும் 13ம்தேதி அதிகாலையில் சபரிவர்மன் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு இருந்த அறை சாவியை யார் வாங்கி சென்றார்கள் என்ற விபரம் பதிவேட்டில் இல்லை. தாக்குதலில் சரிந்து விழுந்தவுடன் மிக ரகசியமாக சாவியை எடுத்து சென்று கைதிகள் அறை திறக்கப்பட்டு இருக்கிறது. இதை திறந்தது யார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
