சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பை எல்லோரும் சேர்ந்து வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இணையவழி சுய கணக்கெடுப்பினை பதிவுசெய்த பின்னர், மக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று (நேற்று) முதல் தொடங்கி உள்ளது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களை கொடுங்கள்.
இணையவழியில் (se.census.gov.in) சுய கணக்கெடுப்பு செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன். உங்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு, வணக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* முழு மனதுடன் பங்கேற்க வேண்டும்-ஆளுநர் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்ததாவது: அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும். இந்த வசதியை பயன்படுத்தி சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்யுங்கள்.
சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள், ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களால் கணக்கெடுக்கப்படுவார்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
