நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனம் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு: அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

 

சென்னை: நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனம் ஓராண்டுக்கு அரசு தள்ளிவைத்திருப்பதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டு தான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இதன் மூலம், ஏற்கனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: