அரவக்குறிச்சி-பள்ளப்பட்டி சாலையை சீரமைத்து சோலார் மின் விளக்குகள் அமைக்கவேண்டும்

அரவக்குறிச்சி, ஜூலை 17:அரவக்குறிச்சி-பள்ளப்பட்டி சாலை சீரமைத்து சோலார் மின் விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் முக்கிய சாலை பழுதடைந்து, போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சாலை முன்பு நல்ல நிலையில் இருந்ததாகவும், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பல இடங்களில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு பின்னர் முறையாக சீரமைக்கப்படாததால் சாலை சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல இடங்களில் அவசரகதியாக தார் ஊற்றி ஒட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சாலை முழுமையாக சீரமைக்கப்படாததால் தொடர்ந்து பள்ளங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக அரவக்குறிச்சி ஆறுமுகம் பள்ளி முதல் அண்ணாநகர் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன், அப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல ஒதுக்கப்பட்டுள்ள வெள்ளைக்கோடு மிகவும் குறுகலாக இருப்பதால், சிறிதளவு தவறினாலும் வாகனங்கள் சாலையோர மண்ணில் இறங்கி சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. இருள் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் விபத்து அபாயம் மேலும் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
எனவே, அரவக்குறிச்சி-பள்ளப்பட்டி சாலையை முழுமையாக புதுப்பித்து தரமான சாலையாக அமைப்பதுடன், இருளாக உள்ள அனைத்து பகுதிகளிலும் சோலார் மின்விளக்குகளை நிறுவி பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்கவும் முடியும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: