கோவை, ஜூலை 17: அருந்ததியர் முன்னேற்ற கழகம், அம்பேத்கர் தேசிய தொழிலாளர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் கோவை மணியரசு, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சம்பத்குமாருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது; கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், வடிகால், மலேரியா கொசு ஒழிக்கும் பணியாளர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள், கிளீனர்கள், பள்ளிகள்,அம்மா உணவகங்கள், பூங்காக்கள், அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள, மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகள் என சுமார் 5000க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாநகராட்சி பணி செய்யும் நாள் விவரம் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
இதனுடன் சேர்த்து அவர்களுக்கு தேவையான சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப இஎஸ்ஐ மற்றும் பிஎப் தொகை ஒப்பந்ததாரர்களுக்கு சேர்த்து வழங்கப்படுகிறது. இதில், ஒப்பந்ததாரர்கள் நூதன முறையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய இஎஸ்ஐயில் சுமார் ரூ.500 வரையிலும், பிஎப்பில் சுமார் ரூ.1500 வரையிலும் குறைத்து செலுத்துகின்றனர். தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டிய சுமார் 1 கோடி ரூபாயை ஒப்பந்ததாரர்கள், சுகாதார ஆய்வாளர், மண்டல ஆய்வாளர்கள் பிரித்து முறைகேடாக அபகரித்து வருகிறார்கள்.
3 முதல் 6 மாதங்கள் வரை ஆட்கள் அனுப்புவதற்கு மட்டுமே ஒப்பந்தம் கோரிவிட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக கால நீட்டிப்பு செய்துள்ளனர். புதிய ஒப்பந்தம் கோராமல் கால நீட்டிப்பு என்ற பெயரில் மோசடி தொடர்கிறது. அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை மாதந்தோறும் அபகரித்து வருகிறார்கள். இந்த மோசடி ஒப்பந்தங்களை நீட்டிப்பு செய்வதை தடுத்து, இவர்களுக்கு மாத சம்பளம் முழுமையாக பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
