மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூட்டம்: வெளிப்படையான டெண்டர் நடைமுறைக்கு வரவேற்பு

கோவை, ஜூலை 17: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் 39வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சி பொறியாளர்களுக்கு பிரிவு உபச்சார விழா நேற்று நடந்தது. இதில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல், துணை தலைவர் ராஜகோபால், துணை பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கோவை மாநகராட்சி பொறியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். லஞ்சம் விதிமுறை மீறல் இல்லாமல் திட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறைக்கு பாராட்டும், ஓபன் டெண்டர் முறைக்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. பார்ட்டி பண்ட் நடைமுறை இல்லாமல் பணி நடத்துவதால் 25 சதவீத தொகை மாநகராட்சிக்கு உறுதியாக மிச்சமாகும். தரமாக திட்டப்பணிகளை செய்து மக்களுக்கு சேவை செய்ய முடியும் என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் பேசும்போது, ‘‘பணி ஓய்வு பெற்று செல்லும் சீனியர் பொறியாளர்கள் தங்களது அனுபவ திறன்களை இளம் பொறியாளர்களுக்கு சொல்லி தர வேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் திறன் மிகுந்த பொறியாளர்களிடம் பணி செய்தோம். இப்போதுள்ள இளம் பொறியாளர்களிடம் இனி தான் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மாநகராட்சி திட்டப்பணிகளை சிறப்பாக அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் செய்து தருவோம் ’’ என்றனர்.

Related Stories: