ரூ.15 கோடி இடம் ஆக்கிரமிப்பு பிரபல நடிகை ஷர்மிலி தர்ணா: முதல்வருடன் இணைந்து நடித்திருப்பதால் மீட்டுத்தர கோரிக்கை

ராமநாதபுரம்: ரூ.15 கோடி மதிப்புள்ள தனது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, ராமநாதபுரத்தில் நடிகை ஷர்மிலி தர்ணாவில் ஈடுபட்டார். ஆவாரம்பூ, தங்க மனசுக்காரன், குணா, காவலன், மின்சார கண்ணா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஐந்து மொழிகளில் நடித்தவர் நடிகை ஷர்மிலி. கவுண்டமணியுடனும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை பெரிய கடை பஜாரில் ஒரு ஓட்டல் முன்பு தனது கணவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து நடிகை ஷர்மிலி கூறியதாவது: ராமநாதபுரம் பஜாரில் எனது குடும்பத்திற்கு சொந்தமாக ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்து இருக்கிறது. இதனை மற்றொரு தரப்பு திடீரென உரிமை கொண்டாடியது.

இதனால் இந்த சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடை, பூட்டப்பட்டிருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர் தரப்பினர், அந்த கடையை திறந்து ஓட்டல் துவங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. எங்களுக்கு சொந்தமான சொத்தை எங்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சருடன் நான் காவலன், தமிழன், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளேன். என்னை முதலமைச்சர் விஜய்க்கு நன்றாக தெரியும். அவர் தலையிட்டு எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றியும், மீட்டும் தர வேண்டும். எனக்கும், கணவர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட இந்த நபர்கள்தான் காரணம். எனவே, முதல்வர் தலையிட்டு உடனடியாக எங்களது சொத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: