அவதூறு பரப்பி வருவதாக யூடியூபர் சங்கர் மீது அருண் ஐபிஎஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: தன் மீது அவதூறு பரப்பி வருவதாக யூடியூபர் சங்கர் மீது அருண் ஐபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அருண் ஐபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.

பணியில் சேர்ந்தது முதல் துணிச்சலாகவும், நேர்மையாகவும், குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்கி பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள என் மீது தனது சமூக வலைதளங்களில் பொய் செய்தி வெளியிட்டு வருவதோடு, வீடியோ மூலமும் அவதூறு பிரசாரத்தையும் யூடியூபர் சவுக்கு சங்கர் மேற்கொண்டு வருகிறார். எனவே, என் மீது தவறான பிம்பத்தை கட்டமைத்து தனது வலைத்தளத்தில் யூடியூபர் சங்கர் பதிவிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: