மதுரை, ஜூலை 16: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட யா.ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் மணிமாறன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை கலந்து கொண்டு, காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை பார்வையிட்ட கல்வி அலுவலர், அவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். விழாவில் மாணவ, மாணவிகள் பாடல், பேச்சு, கவிதை, நடனம், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
