வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குழு அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண செனட்டர் லிண்ட்சே கிரகாம் கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது முயற்சியில் உருவாக்கப்பட்ட புதிய மசோதா ஒன்றை ஆளும் குடியரசு மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த மசோதா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகளுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கிறது.
அதே சமயம், ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கிறது. அந்த நாடுகள் வாங்கும் எரிவாயு அளவு அவற்றின் ஒட்டுமொத்த தேவையில் மிகச்சிறிய பகுதியாகவே உள்ளது என்றும், ரஷ்யாவை சார்ந்திருத்தலைக் குறைக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதும் காரணமாக கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கத்தில், அரசியல் ஆயுதமாக இறக்குமதி வரியை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். இந்த மசோதாவின் முந்தைய வடிவம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க முயன்றிருந்தது.
இது குறித்து அலபாமாவைச் சேர்ந்த குடியரசு கட்சி செனட்டர் கேட்டி பிரிட் கூறுகையில், ‘‘இந்த மசோதாவை உருவாக்குவதற்கு கிரகாம் சோர்வின்றி, இடைவிடாது உழைத்தார். அவரது பணிவாழ்விலேயே இது மிக முக்கியமான சட்டமாக அமையும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிசிசிப்பியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் ரோஜர் விக்கர் கூறுகையில், ‘‘இந்த மசோதா, ஐரோப்பாவில் அமைதியைப் பாதுகாக்கும் முயற்சியில் கிரகாம் ஆற்றிய மிகச்சிறந்த சாதனை’’ என குறிப்பிட்டார்.
* மிகவும் அவமானம்
காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில், ‘‘எவ்வளவு அவமானகரமான சூழல் இது என்று கற்பனை செய்து பாருங்கள். ரஷ்ய எண்ணெய் வாங்க டிரம்பின் ஒப்புதல் தேவைப்பட்டது. இப்போது அதே செயலை செய்ததற்காக தண்டனைக்குரிய வரிகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தப்படுகிறோம். இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.
