விக்கிரவாண்டி, ஜூலை 13: கோவை வேளாண் பல்கலை மாணவி மர்மமான முறையில் இறந்ததால் விக்கிரவாண்டியில் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையை சேர்ந்த மகாலிங்கம், வாசுகி தம்பதி மகள் தர்னிகா(19). கோவை வேளாண்மை பல்கலைக்கழக விடுதியில் தங்கி 2ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். கடந்த 9ம் தேதி இரவு விடுதியில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து மாணவி சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு அவரது சடலம் சொந்த ஊருக்கு வந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாணவியின் உறவினர்கள் ஒன்று திரண்டு விக்கிரவாண்டி மேலக்கொந்தை கூட்ரோடு எதிரே உள்ள பைபாஸ் சாலையின் இருபுறமும் அமர்ந்து மாணவி இறந்தது குறித்து பெற்றோரிடம் கூறாமல் பிரேத பரிசோதனை செய்ததாகவும், இறப்பு பற்றி தகவல் கூறாத விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும், நிவாரணம் வழங்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,கள் ரூபன்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாசில்தார் வேல்முருகன் முன்னிலையில், இன்ஸ்பெக்டர்கள் கல்பனா, சத்யா, குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, பிருத்வி ராம் ஆகியோர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் என்பதால் அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலளித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்கனவே சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
