விழுப்புரம், ஜூலை 8: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நொச்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (21). இவர் கடந்த 2021 டிசம்பர் 12ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட சங்கர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.
