சிவகங்கை: சிவகங்கை நகர் போலீசார் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (35), சென்னை திருவல்லிக்கேணி அபுசாகுபர் சாதிக் (26), திருச்சியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (28), முகமதுரபீக் (எ) பாபு (30) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில் 3.100 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது. அதனையும் 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி சிவபிரசாத் கூறுகையில், ‘‘இந்த போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருளை சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதை பங்கிட்டு கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 கோடியாகும். போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
* ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய வாலிபர்கள்
கோவை உக்கடம் – வாலாங்குளம் சாலையில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்சிற்குள் இருந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆம்புலன்சில் இருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவை பீளமேடு, குரும்பர் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கட்டிகுளத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வீரசின்னமருது (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டன் மற்றும் வீரசின்னமருது கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கும், ஓசூர் காவல் நிலையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கும் நிலுவையில் உள்ளன. அதேபோல் வீரசின்னமருது மீது காட்டூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. இதேபோல், மேற்குவங்கத்தில் இருந்து நெல்லைக்கு புருலியா விரைவு ரயில் புறப்பட்டு வந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் 3வது பிளாட்பாரத்திற்கு வந்தது.
பயணிகள் கீழே இறங்கி சென்றதைத் தொடர்ந்து இரவு ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளை சோதனையிட்டனர். அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு சோல்டர் பேக் மற்றும் கருப்பு கவர் பையை கண்டெடுத்தனர். அதில் 5 பண்டல்களில் 10 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். இதே ரயிலில் நள்ளிரவு நேரத்தில் திண்டுக்கல் ரயில்நிலையத்திலும் ரயில்வே போலீசார் சோதனையின் ேபாது 10 கிலோ கஞ்சா சிக்கியது குறிப்பிடத்தக்கது.
