சென்னிமலை ஒன்றிய குக்கிராமங்களில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னிமலை : சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள குக்கிராமங்களில் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் பழுதடைந்துள்ளது. எனவே, பழுதடைந்த சாலைகள் சீரமைக்க படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக்கு முந்தைய 10 ஆண்டு கால ஆட்சி காலங்களில் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் அனைத்தும் ஓரிரு வருடங்களில் பழுதானதால், கடந்த 2021-2026ம் ஆண்டு திமுக ஆட்சியில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2021ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் பல இடங்களில் புதிதாக இருவழிச்சாலை மற்றும் 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டது.

மேலும், இந்த சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது.அதேபோல் கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற மற்றொரு புதிய திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய தார் சாலைகளாக மேம்படுத்தப்பட்டது.

அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் பெரும்பாலான மண் சாலைகள் புதிய தார் சாலைகளாக புதுப்பிக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே பழுதடைந்த தார் சாலைகளும் மேம்படுத்தப்பட்டது. ஆனால், சில கிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலைகளை இதுவரை பராமரிப்பு செய்யாததால் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

சென்னிமலை அருகே எல்லைக்கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை குமாரபாளையத்தில் இருந்து நொய்யல் ஆறு வரை உள்ள சாலை கடந்த 2011ம் ஆண்டு தார் சாலையாக அமைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த சாலைகளை இதுவரை எந்த பராமரிப்பும் செய்யாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை மற்றும் மாலையில் அரசு பஸ் புறப்பட்டு எல்லை குமாரபாளையம் மற்றும் சொக்கநாதபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக மீண்டும் சென்னிமலைக்கே அந்த அரசு பஸ் சென்று வந்தது. ஆனால், எல்லை குமாரபாளையம் மற்றும் சொக்கநாதபாளையம் இடையே தார் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக புதர் மண்டி காணப்படுவதால் அரசு பஸ் இந்த வழியே செல்வது இல்லை.

இதே ஊராட்சியில் மேட்டூர் ஓடையில் இருந்து சொக்கநாதபாளையம் செல்லும் சாலையும் கடந்த 2016-2017ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு போடப்பட்ட தார் சாலை முற்றிலுமாக பெயர்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லை குமாரபாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் இருந்து நொய்யல் ஆறு வரை உள்ள சாலை மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி சக்தி நகரில் இருந்து திப்பம்பாளையம் வரை உள்ள சாலை ஆகியவை மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதுடன், இதற்கான மதிப்பீட்டு தொகையும் வெளியிடப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் இதுவரை தொடங்கவே இல்லை.

அதேபோல், 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் எடக்காடு முதல் கே.ஜி.வலசு – குமாரபாளையம் மெயின் ரோடு வரை உள்ள சாலை, குப்பிச்சிபாளையத்தில் மயானம் செல்லும் சாலை, ஓலக்காடு சாலை ஆகியவை இன்னும் பராமரிப்பு செய்யாததால் படுமோசமாக காணப்படுகிறது.

இப்படி சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள குக்கிராமங்களில் சாலைகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு செய்யாமல் உள்ளது.‌ இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கூட சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த திமுக ஆட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் சாலைகள் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சாலைகள் அமைத்தால் அதன் ஒப்பந்ததாரரே 3 அல்லது 5 வருடங்களுக்கு அந்த சாலைகளை பராமரிக்க வேண்டும் என்பதால் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டது.

ஆனால், 15 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பல சாலைகள் ஓரிரு வருடங்களில் குண்டும், குழியுமாக மாறியதுடன் இதுவரை அந்த சாலைகளை பராமரிப்பு செய்யவே இல்லை. மேலும், சாலைகளில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகிறார்கள்.

எனவே, சென்னிமலை ஒன்றியத்தில் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மேம்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: