×

மாஜி காங்கிரஸ் நிர்வாகியை தலை துண்டித்து எரித்துக்கொன்ற 5 பேருக்கு இரட்டை ஆயுள்

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தலைவன்கோட்டை அரண்மனை தெருவை சேர்ந்தவர் சாமிதுரை (59). முதல் மனைவி வெள்ளத்துரைச்சியை பிரிந்து சென்ற இவர், இரண்டாவதாக ஜோதி என்பவரை திருமணம் செய்து அச்சன்புதூரில் வீடு ஒத்திக்கு எடுத்து தங்கியிருந்தார். முதல் மனைவியுடன் வாழ்ந்த போது அவருக்கு கார் ஒன்றை பைனான்ஸ் மூலமாக வாங்கிக் கொடுத்துள்ளார். பிரிவு காரணமாக கார் வெள்ளத்துரைச்சி வசம் இருந்தது.

அந்த காரை சாமிதுரை வெள்ளத்துரைச்சிக்கு தெரியாமல் எடுத்து அச்சன்புதூரில் உள்ள ஜோதியின் வீட்டுக்கு அருகில் மறைத்து வைத்துள்ளார். இந்த கார் பைனான்ஸ் மூலமாக வாங்கப்பட்டது என்பதால் அதற்கான பணம் செலுத்த தவறியதால் காரை அந்நிறுவனத்தினர் எடுத்துச்செல்ல தேடியுள்ளனர். அப்போது பைனான்ஸ் நிறுவனத்தினர் அப்பகுதியில் முக்கிய பிரமுகரான முன்னாள் காங்கிரஸ் வட்டார தலைவரான ராஜகோபால் உதவியை நாடியுள்ளனர். ராஜகோபால் பைனான்ஸ் நிறுவனத்தினருக்கு காரை எடுத்துச்செல்ல உதவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை கடந்த 2015 ஆக.12ம் தேதி இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை அச்சன்புதூர் ரோட்டில் உள்ள வீட்டிற்கு ராஜகோபால் நடந்து சென்றபோது சாமிதுரை கூட்டாளிகளான சொக்கம்பட்டி ஐயப்பன் (44), திரிகூடபுரம் ராமர் (54), தலைவன்கோட்டை முத்துராஜ் (39), வாசுதேவநல்லூர் சுப்பையா பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்துகாரில் கடத்தினார்.

பின்னர் அவரை கொலை செய்து உடலை அதே காரில் போட்டு தாழையூத்து – நாகர்கோவில் பைபாஸ் ரோட்டோரம் தலையை மட்டும் தனியாக எடுத்து விட்டு உடலை பெட்ரோல் ஊற்றி அங்கேயே எரித்தனர். பின்னர் தலையை மட்டும் நாகர்கோவில் பைபாஸ் ரோட்டில் உள்ள கக்கன்நகர் மேம்பாலத்திற்கு மேல்புறம் சர்வீஸ் ரோட்டின் அருகில் வைத்து டீசல் ஊற்றி எரித்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் விசாரித்து, சாமிதுரை உள்பட 5 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக இரட்டை ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக 5 ஆண்டு தண்டனையும், கூட்டாக சேர்ந்து கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டு தண்டனையும் அத்துடன் அனைவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Tags : Congress ,Tenkasi ,Samidurai ,Thalaivankottai Aranmana Street ,Vasudevanallur ,Tenkasi district ,Vellathuraichi ,Jyothi ,Achanputhur ,
× RELATED இலங்கைக்கு கடத்த பதுக்கி...