மதுரை: கரூர் தவெக கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு தற்காலிக அரசு பணி மட்டுமே வழங்கலாம் என்றும், கருணைப் பணி நியமனம் கரூர் சம்பவத்திற்கு பொருந்துமா என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சி துணைச்செயலாளர் சீனி அகமது ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தவெக சார்பில் கடந்தாண்டு செப். 27ல் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் பொதுக்கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. உயிரிழந்த 41 பேரில் 32 குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பணி வழங்கப்பட உள்ளதாகவும், ஜூலை 10ம் தேதி (நேற்று) கரூர் மாவட்டத்திற்குச் செல்லவிருக்கும் அரசுத்தரப்பு மூலம், இதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கும்பகோணம் விபத்து முதல் கள்ளச்சாராய மரணங்கள், தீ விபத்துகள், சாலை விபத்துகள் வரை தமிழ்நாட்டில் இதற்கு முன் பல பேரிடர்கள் நடந்துள்ளன. அந்தப் பாதிப்புகளுக்கு அரசு நிதி உதவியும் நிவாரணமும் வழங்கியுள்ளதே தவிர, நிரந்தர அரசு வேலை வழங்கியதில்லை. விபத்துகளுக்கு அரசு வேலை வழங்குவதில் எந்தவொரு பொதுவான, சீரான கொள்கையும் இதுவரை இல்லை. இப்படி முறையான கொள்கை இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் அவசர அவசரமாக நிரந்தர அரசு வேலை வழங்குவது தேவையற்ற சட்டச் சிக்கல்களை உருவாக்கும்.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, நியாயமான முறையில் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இத்தகைய சூழலில், விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக அரசு வேலைகளை வழங்குவது நேர்மையாக படிக்கும் மாணவர்களின் வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பு உரிமையையும் பறிக்கும் செயலாகும். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணை வழக்கின் மிக முக்கிய சாட்சிகள் ஆவர்.
குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில், சாட்சிகளாக இருக்கும் இக்குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது சாட்சிகளுக்கு நன்மைகளை வழங்கி, அவர்களின் வாக்குமூலங்களை மாற்றவோ அல்லது திசைதிருப்பவோ வழிவகுக்கும். இது நீதி நிர்வாகத்தில் தலையிடும் செயலாகும். தவெக தலைமையிலான தற்போதைய அரசு, தங்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெறுவதற்காகவும், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
எனவே, இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கவோ அல்லது அதனை நடைமுறைப்படுத்தவோ அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், ‘‘அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்’’ என்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.சரவணன் ஆஜராகி, ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்பிற்கு முறையாக விதிகளை பின்பற்றி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்தச் சம்பவத்தை அரசின் வரம்பு மீறிய செயலாக கருதலாம் என்றால், அத்தகைய பார்வை மிகவும் குறுகியதாகவே இருக்கக்கூடும். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது உகந்தது அல்ல என்பதால் பணி நியமன விழா திட்டமிட்டபடி நடக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இருப்பினும், வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். பணி நியமனம் பெறுபவர்கள் தங்களது முதல் மாதச் சம்பளத்தைப் பெறுவதற்கு முன்பாகவே, இந்த வழக்கு முழுமையாக விசாரித்து முடிக்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலரை நீதிமன்றம் தாமாக இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறது.
பொது வேலை வாய்ப்பு என்பது விதிகளின்படியே வழங்கப்படும் என்பதையும், நியாயமான காரணமின்றி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான தற்போதைய விதிகள் என்ன? அவை இந்தச் சம்பவத்திற்குப் பொருந்துமா என்பது குறித்து விரிவான அறிக்கையை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்-செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
