தெர்மாகோலை மிஞ்சிய தவெக அரசின் அடடே செங்கல் சாலை!

ராமநாதபுரம்: கடந்த அதிமுக ஆட்சியில் சூரிய ஒளியிலிருந்து தண்ணீரை பாதுகாக்க தெர்மாகோலை அமைத்தது போல தற்போதைய தவெக அரசு கடலாடியில் ஜல்லி கற்களுக்கு பதிலாக, கழிவு செங்கல்,துாசு துகள்களை கொட்டி அதன்மீது கிராவல் சாலை அமைத்தது கேலி கூத்தாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் போக்குவரத்து மிகுந்த தேவர்சிலை முதல் பஸ் நிலையம் பகுதி, பஜார், அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பு வரை சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் பகுதியில் மட்டும் கடலாடி யூனியன் பிடிஓ(தனி அலுவலர் ) உத்தரவின் பேரில் கடலாடி பஞ்சாயத்து நிர்வாகம் நிதியிலிருந்து தற்காலிக மெட்டல் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் ஜல்லிகற்கள்,மெக்கடம் கலவை,கிராவல் போட்டு, நன்றாக தண்ணீர் ஊற்றி, ரோலர் எஞ்சின் வைத்து அழுத்தி சாலை அமைப்பதற்கு பதிலாக, அரசு பள்ளியில் இருந்த பழைய சேதமடைந்த கட்டிடத்தை இடித்து,அந்த செங்கல் கழிவுகளை சாலையில் கொட்டி,பரப்பி அதன்மீது கிராவல் மண் அடித்து பெயரளவிற்கு சாலை அமைத்துள்ளனர்.

இதனால் ஒரு கனமழை பெய்தால் கூட கிராவல், கட்டிட கழிவுகள் மழைநீரில் அடித்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் சிவ குரு பிரபாகரன் உரிய விசாரணை நடத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய அமைச்சர் ஒருவர் சூரிய ஒளியிலிருந்து தண்ணீரை பாதுகாக்க தெர்மக்கோல் போட்டது போன்று, தற்போது பஸ் போக்குவரத்து உள்ள முக்கிய சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டி கிராவல் சாலை அமைத்துள்ளது கேலி கூத்தாக அமைந்துள்ளது.

Related Stories: