கரூர், ஜூலை 10: கரூர் பசுபதிபாளையம் சாலையில் பேருந்துகள் பல்வேறு இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் பசுதிபாளையம் அமராவதி ஆற்றின் உயர் மட்ட பாலத்தை தாண்டியதும் பசுபதிபாளையம் கடைவீதி, காவல் நிலையம் போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதியின் வழியாக கரூரில் இருந்து புலியூர், மேலப்பாளையம், நரிகட்டியூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பசுபதிபாளையம் கடைவீதி வழியாக செல்கிறது. குறுகிய சாலையாக உள்ள இந்த சாலையின் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் ஏறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலையில் பயணிக்கும் பேருந்துகள், அவ்வப்போது நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
